அரசு பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுகிறது... தமிழக அரசு புதிய முடிவு
போக்குவரத்து துறையின் நஷ்டத்தை சமாளிக்க அரசு பேருந்து கட்டணங்களை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் போக்குவரத்து துறை நஷ்டத்தை சமாளிக்க, பேருந்து கட்டணங்களை அதிகரிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம், மதுரை, கும்பகோணம், சேலம், திருநெல்வேலி, கோவை ஆகிய 6 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், நீண்ட தூர பேருந்து சேவைக்கான அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகிய இரண்டும் தனித்தனியாக செயல்படுகின்றன.
தமிழக அரசின் இந்த போக்குவரத்துக் கழகங்களில் சுமார் 22 ஆயிரத்து 203 பேருந்துகள் உள்ளன. தமிழ்நாட்டில் தினமும் இரண்டு கோடி பேர் பேருந்து சேவையை பயன்படுத்துகிறார்கள். ஏழை எளிய மக்களின் போக்குவரத்துக்கு உதவியாய் இருப்பதால், போக்குவரத்து துறை பல ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வந்தாலும் பேருந்து கட்டணம் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
2400 கோடி ரூபாய் கடன்
தமிழகத்தின் பேருந்து கட்டணம் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவை விட 40 சதவிகிதத்திற்கும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழக போக்குவரத்து துறை கடும் நெருக்கடியை சந்தித்ததன் காரணமாக, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பேருந்து கட்டணத்தை உயர்த்தினார். இதற்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. பேருந்து கட்டணத்தை உயர்த்தியும் போக்குவரத்து துறையை நஷ்டத்தில் இருந்து மீட்க முடியாமல் தமிழக அரசு திணறி வந்தது. இதுவரை தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் வாங்கிய கடன் தொகை 2400 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.
விரைவில் வேலைநிறுத்தம் ?
இந்நிலையில், போக்குவரத்து கழக பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்க வேண்டிய தொகை மட்டும் ரூ.1500 கோடி நிலுவையில் உள்ளது. கடன்களை அடைத்து, இந்த நிலுவைத் தொகையை எப்போது கொடுக்க முடியுமோ என்ற சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 28ம் தேதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்றால் வேலைநிறுத்தம் நடத்தப்போவதாகவும் அறிவித்து உள்ளனர்.
விரைவில் பேருந்து கட்டணம் உயரும்
இதன் காரணமாக இக்கட்டான சூழலை சமாளிக்க வேண்டி உள்ளதால், தமிழக அரசு பஸ்களின் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. கடன் சுமையை குறைக்க, பஸ் தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க, புதிய பஸ்கள் வாங்க, பராமரிப்பு பணிகளை மேம்படுத்த அரசு பஸ் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு பஸ்களின் கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளது. அதன்படி சாதாரண பஸ்களில் கிலோ மீட்டருக்கு வசூலிக்கப்படும் தொகை 42 காசில் இருந்து 60 காசாக உயர உள்ளது. எக்ஸ்பிரஸ், டீலக்ஸ் பஸ்களில் கட்டணம் கிலோ மீட்டருக்கு 56 காசில் இருந்து 73 காசாக உயர உள்ளது.
நஷ்டத்தை சமாளிக்க முடிவு
சூப்பர் டீலக்ஸ் பஸ்கள் கட்டணம் 60 பைசாவில் இருந்து 75 காசாகவும், அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களின் கட்டணம் கிலோ மீட்டருக்கு 70 பைசாவில் இருந்து 95 பைசாவாக உயர உள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட பஸ்களின் கட்டணமும் உயர்த்தப்பட உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பஸ்களில் தற்போது குறைந்தபட்ச கட்டணம் மூன்று ரூபாயாக உள்ளது. இந்த கட்டணத்தை 5 ரூபாயாக உயர்த்த முடிவு செய்துள்ளனர். வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பஸ்களின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயரும். அதிகப்பட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.