வரப் போகிறது வட கிழக்குப் பருவ மழை.. அதிகாரிகளுடன் ஆலோசனைகளில் குதித்த அமைச்சர்
சென்னை: தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது. மழைக்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது. 20ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அது தாமதமாகிறது. 25ம் தேதி வாக்கில் தொடங்கலாம் என்று தெரிகிறது.
கடந்த ஆண்டு பெய்த வட கிழக்குப் பருவ மழை மக்களை பெரும் துயருக்குள்ளாக்கியது. அந்த சோகத்தை மக்களால் இன்னும் கூட மறக்க முடியவில்லை. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், தூத்துக்குடி மக்களால் அதை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது.
இந்த நிலையில் இந்த பருவமழை காலத்தை எதிர்கொள்வது தொடர்பாக ஏற்கனவே அரசு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் கூறப்பட்டபடி, மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை தயார் செய்துள்ளனர். அதன்படி, நீர்நிலைகளை தூர்வாருவது, வெள்ள வடிகாலில் உள்ள அடைப்புகளை நீக்குவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வருவாய் அமைச்சர்
இந்த நிலையில் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செயலாளர் சந்திரமோகன், வருவாய்துறை நிர்வாக ஆணையர் சத்யகோபால் உள்பட பல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களிடம் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
25ம் தேதி முதல் மழை
வடகிழக்கு பருவமழை இந்தாண்டு 25ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 994 பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக கணக்கெடுக்கப்பட்டது.
பேரிடர் தடுப்பு நடவடிக்கை
அந்த பகுதிகளில் பேரிடர் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றை 25ம் தேதிக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரம் செயல்படக்கூடிய போர்கால நடவடிக்கை மையம் மாநில, மாவட்ட, தாலுக்கா அளவில் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தாலுகா அளவில்
வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் பணிகளை கண்காணிக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாவட்ட, தாலுகா அளவில் குழுக்களை ஒருங்கிணைந்து செயல்படுத்துவார். அரசின் அனைத்து துறைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மக்களைக் காப்பாற்ற திட்டம்
மருத்துவமனை உள்பட கட்டிடங்களுக்குள் வெள்ளம் புகுந்தால், மக்களை காப்பாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த திட்டத்தை உருவாக்கிக் கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளோம். மாவட்ட ரீதியான ஆய்வு கூட்டத்தையும் நடத்தவுள்ளோம்.
வெள்ள பாதிப்பு ஏற்பட்டால்
வெள்ளபாதிப்பு ஏற்பட்டால் கடலோர காவல்படை, மத்திய பேரிடர் மீட்பு குழு, மத்திய பாதுகாப்பு படை உதவிகளை விரைந்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளபாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும் அதனை பாதுகாத்து வைக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
வெள்ள தடுப்புப் பணிகள்
இதற்கிடையே, கடந்த ஆண்டு வெள்ளம் பாதித்த கடலூர், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் ரூ.140 கோடியில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் அடையாறில் ஏற்கனவே ரூ.3.5 கோடியிலும், தற்போது ரூ.6 கோடியிலும் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.