கிறிஸ்டியைவிட கம்மி விலைக்கு முட்டை தர நாங்கள் ரெடி.. கோழிப்பண்ணை சம்மேளனம் அதிரடி
முட்டை டெண்டரை பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டும் என பண்ணையாளர்கள் சம்மேளன தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல்: தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை மீண்டும் கோழிப்பண்ணையாளர்களுக்கே வழங்க வேண்டும் என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்துக்கு முட்டை, சத்து மாவு, பருப்பு ஆகியவற்றை கிறிஸ்டி நிறுவனம் வழங்கிவந்தது. சத்துணவு திட்டம் மூலம் 58 லட்சம் குழந்தைகள் பயனடைந்துவருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் முட்டையை மொத்தமாக ஒப்பந்த அடிப்படையில், கிறிஸ்டி நிறுவனம் வழங்கி வந்தது. இந்த சூழலில்தான், அண்மையில் கிறிஸ்டி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் வருமானவரி துறை அதிகாரிகள் கிறிஸ்டி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிறிஸ்டி நிறுவனம் பல கோடி ரூபாய்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது. அதோடு 10 கிலோ தங்கம் ரூ.17 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதல் செய்யும் டெண்டரை வரி ஏய்ப்பு செய்த கிறிஸ்டி நிறுவனத்துக்கு வழங்கியதை ரத்து செய்தது.
இந்நிலையில், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சமேளனத்தின் தலைவர் சுப்பிரமணியன் இன்று செய்தியாளரகளிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை முன்புபோல மீண்டும் கோழிப்பண்ணையாளர்களுக்கே வழங்க வேண்டும். கிறிஸ்டி நிறுவனம் வழங்கியதை விட குறைவான விலையில் பண்ணையாளர்கள் வழங்கத் தயாராக இருக்கிறோம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சத்துணவு முட்டைக்கான டெண்டரை மாதம் தோறும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதோடு, சத்துணவு முட்டை டெண்டரை பண்ணையாளர்களுக்கு வழங்க வேண்டி தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளத்தினர் முதல்வரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.