முடக்கப்பட்ட தமிழக அரசின் இணையதளம் மீண்டும் உயிர் பெற்றது.. முடக்கியது யார்?
சென்னை: தமிழக அரசின் இணையதளப் பக்கங்கள் மர்மநபர்களால் முடக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் அதிகாரப்பூர் இணையதளம் www.tn.gov.in ஆகும். இதில், தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள், மாநில அரசு குறித்து முக்கிய தகவல்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த இணையதளத்தை மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். இதனால் முக்கிய பக்கங்கள் சிலவற்றை நேற்று மக்களால் பார்க்க இயலவில்லை.
ஹேக் செய்யப்பட்ட பக்கங்கள் பச்சை நிறத்தில் காட்சி அளித்தன. அதோடு, அவற்றில் PAK CYBER SKULLZ என்ற சொற்களும் இடம் பெற்றிருந்தது. இதனால், தமிழக அரசின் இணையதளப் பக்கங்களை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முடக்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இம்மாத தொடக்கத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. அதன் எதிரொலியாகவே இந்தியாவின் முக்கிய இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முடக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே தேசிய பசுமை தீர்பாயத்தின் இணையதளம், கேரளாவைச் சேர்ந்த கல்லூரி ஒன்றின் இணையதளம் , கர்நாடகா போலீஸ் இணையதளம் மற்றும் மும்பை அரசு சட்டக் கல்லூரி இணையதளம் ஆகியவை பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்களால் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்தப் பட்டியலில் தமிழக அரசின் இணையதளமும் இணைந்துள்ளது. இந்த இணையதளத்திலுள்ள முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
விரைந்து செயல்பட்ட அதிகாரிகள் முடக்கப்பட்ட தமிழக அரசின் இணையதளத்தை மீண்டும் சரி செய்தனர். இந்த முடக்கத்திற்கு காரணமானவர்கள் குறித்து விசாரணை முடுக்கிவிடப் பட்டுள்ளது.