ஜெ. சிலை சரியில்லைதான்.. அமைச்சர் 'யூ டர்ன்'.. அம்பலமான அரசின் நிர்வாக திறமை, அக்கறை!
சென்னை: முன்னாள் முதல்வர், ஜெயலலிதா சிலையை பார்த்தால் நடிகை காந்திமதியை பார்த்த மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்தபோது, அப்படி சொல்பவர்கள் அயோக்கியர்கள் என்ற ரீதீயில் பேட்டியளித்த தமிழக அமை
Recommended Video
சென்னை: முன்னாள் முதல்வர், ஜெயலலிதா சிலையை பார்த்தால் நடிகை காந்திமதியை பார்த்த மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்தபோது, அப்படி சொல்பவர்கள் அயோக்கியர்கள் என்ற ரீதீயில் பேட்டியளித்த தமிழக அமைச்சர்கள், இப்போது மக்கள் கருத்துக்கு மதிப்பளித்து, சிலையில் மாற்றம் செய்வதாக கூறியுள்ளனர்.
ஜெயலலிதாவின் 70வது பிறந்த தினமான கடந்த சனிக்கிழமை, அதிமுக தலைமை அலுவலகத்தில், அவரது 7 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுக்கொரு ரிமோட் கண்ட்ரோல் மூலம் சிலையை திறந்து வைத்து ஆச்சரியப்படுத்தினர்.
சிலை சர்ச்சை
சிலை திறப்புதான் இப்படி வித்தியாசமாக நடந்தது என்று பார்த்தால், சிலையும் வித்தியாசமாக இருந்ததை பிறகுதான் மக்கள் கவனிக்க முடிந்தது. உருவம் ஓ.கே. ஆனால், முக அமைப்பு ஜெயலலிதாவுடன் பொருந்திப்போகவில்லை என்பது மக்கள் கருத்து. அதை சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் வெளியிட்டு கொட்டி தீர்த்து விட்டனர்.
தப்பு நடந்துள்ளது
ஆனால், அமைச்சர் ஜெயக்குமார் அன்றைய தினம் அளித்த பேட்டியில், ஜெயலலிதா சிலையை குறை சொல்வோரை கடுமையாக வறுத்தெடுத்தார். இந்த நிலையில் நேற்று அளித்த பேட்டியில், மக்கள் கருத்தை மதித்து சிலையை மாற்றியமைப்போம் என கூறியுள்ளார். இதனால் சிலையில் குறைபாடு இருப்பதை அரசும் ஒப்புக்கொண்டுவிட்டது என்றே அர்த்தமாகிறது. ராஜேந்திர பாலாஜி போன்ற அமைச்சர்கள் இன்னும் கூட சிலை அமோகமாக வந்துள்ளது என கூறிவருவது தனிக்கதை.
ஆந்திர சிற்பி
இந்த சிலையை ஆந்திர மாநில சிற்பி பி.எஸ். வி.பிரசாத் வடிவமைத்திருந்தார். சிலை நிறுவப்படும் 20 நாட்களுக்கு முன்புதான் அதற்கான ஆர்டர் சிற்பிக்கு தரப்பட்டுள்ளது. முதலில் களிமண்ணால் மாதிரி சிலை செய்யப்பட்டுள்ளது. இதற்கு 3 நாட்கள் பிடித்தது. பிறகு வெண்கல சிலை செய்யும் பணி இரவு பகலாக நடைபெற்றுள்ளது.
போட்டோ காண்பித்தோம்
களிமண் சிலை மாதிரியில் எந்த மாறுபாடும் தெரியவில்லை. இதையடுத்து வெண்கலத்தில் சிலை உருவாக்கப்பட்டது. இரவும் பகலுமாக பாடுபட்டு இந்த சிலை செய்யப்பட்டது. "சிலை செய்து முடித்த போது அதை பல்வேறு கோணங்களில் படமாக எடுத்து அதிமுக தலைவர்களுக்கு சிற்பி அனுப்பி வைத்தேன். அவர்கள் அதை பார்த்துவிட்டு ஒப்புதல் அளித்தனர். அதன் பிறகே சிலையை சென்னைக்கு கொண்டு வந்தேன்" என்று பேட்டியொன்றில் பிரசாத் தெரிவித்துள்ளார்.
சரி செய்கிறோம்
"ஜெயலலிதா சிலையை உருவாக்க நானும், எனது சகோதரன் காமதேனு பிரசாத்தும் மற்றும் 20 ஊழியர்களும் பாடுபட்டு செய்தோம். குறுகிய காலத்தில் செய்யப்பட்ட சிலை என்பதால் சிறு தவறு நேர்ந்திருக்கலாம் என நினைக்கிறேன். இதுவரை நாங்கள் எத்தனையோ தலைவர்களுக்கு சிலை வடித்துள்ளோம். தவறு என்ற பேச்சேவரவில்லை. ஜெயலலிதா சிலை சார்ந்த விமர்சனங்களால் நான் மனவேதனை அடைந்துள்ளேன். நாங்கள் செய்த தவறை நாங்களே சரி செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் இதுவரை அதிமுக தரப்பில் இருந்து யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. ஜெயலலிதா சிலையை எங்கள் செலவிலேயே சரி செய்ய உள்ளோம்" என்றும் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கவனிப்பு இல்லை
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், தாங்கள் பெரும் தலைவியாக வணங்குவதாக கூறிக்கொள்ளும் ஜெயலலிதா சிலையை வடிவமைத்த பிறகு நேரில் சென்று பார்த்து அரசு தரப்பில் நிறை, குறைகளை எடுத்துக்கூறவில்லை என்பது பிரசாத் பேட்டியின் மூலம் அம்பலமாகியுள்ளது. போட்டோக்களைத்தான் பார்த்துள்ளனர். அப்படியும் சிலையில் எந்த மாற்றமும் செய்ய சொல்லவில்லை. மற்றொரு விஷயம், தங்கள் கட்சி தலைவராக இருந்த, தாங்கள் வணங்குவதாக கூறிக்கொள்ளும் ஒருவரின் சிலையையே சிறப்பாக வடிவமைக்க முடியவில்லை எனும்போது, ஆட்சி நிர்வாகத்தை எப்படி இவர்கள் கவனமாக கையாள்வார்கள் என்ற கேள்வியும் மக்களிடம் எழுகிறது.