அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு எவ்வளவு? இதோ பட்டியல் #salaryhike
அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் ஊதிய உயர்வு அளிக்கப்பட்ட பட்டியலையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய ஊதிய குழு திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் பொழுதெல்லாம், தமிழ்நாடு அரசும் அதே ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது.
அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும் போது, உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை வழங்கி வருகிறது. தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிநிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு அளித்திட 'அலுவலர் குழு' 2017-ஐ அமைத்தது. அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனதுப ரிந்துரைகளை 27.9.2017 அன்று தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பித்தது.
இதுவரை தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்கள் எடுத்துக் கொண்ட காலஅளவை விட, இம்முறை அமைத்த அலுவலர் குழு தான் மிகக் குறைந்த கால அவகாசத்தில் அறிக்கை அளித்து, ஊதிய விகிதங்களில் மாற்றங்களை விரைவாக கொண்டுவர வழிவகுத்துள்ளது.
இப்பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்து, எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அவற்றை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.
அரசு ஊழியர்கள் ஊதியம்
தமிழ்நாடு அரசு, மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர்/ ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய ஊதிய உயர்வு
மாநிலத்தின் நிதிநிலையையும், அதேசமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப் பயனுடனும் அமல்படுத்தஆணையிட்டுள்ளேன்.
அதிகமான ஊதிய உயர்வு
இதன்படி, தற்போது உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100/- மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.77,000 /- என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700/- மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், முந்தைய ஊதியக் குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான உயர்வைவிட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓய்வூதியம், பணிக்கொடை அதிகரிப்பு
அதேபோன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம்/ குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியை பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850/- என்றும், அதிகபட்ச ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500/- மற்றும் ரூ.67,500/- என்றும் உயர்த்தி வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மதிப்பூதியம் எவ்வளவு
தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பன்னிரெண்டு லட்சம் அரசு ஊழியர்கள் பயன்
இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது . இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் பன்னிரெண்டு லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு இலட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள்
ஊதிய பட்டியல் வெளியீடு
ரூ.21,792 ஊதியம் பெறும் அலுவலக உதவியாளர் இனி இனி ரூ.26,720 பெறுவார். மேலும் இளநிலை உதவியாளர் ஊதியம் ரூ.37,936ல் இருந்து ரூ.47,485 ஆகிறது. இதேபோல் இடைநிலை ஆசிரியர் சம்பளம் ரூ.40,650ல் இருந்து ரூ.50,740 ஆகிறது. மேலும் ஆய்வாளர் ஊதியம் ரூ.69,184ல் இருந்து ரூ.84,900 ஆக உயருகிறது. துணை ஆட்சியர் ஊதியம் ரூ.81,190ல் இருந்து ரூ.98,945 ஆக உயருகிறது.
சத்துணவு சமையலர்கள்
இதேபோல் சத்துணவு அமைப்பாளர்களுக்கு சிறப்பு ஓய்வூதியம் ரூ.1,500இல் இருந்து ரூ.2,000ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாதம் ஊதியமாக ரூ.10,810 வாங்கும் சத்துணவு அமைப்பாளர்கள் இனி ரூ.13720 பெறுவார்கள். மேலும் சத்துணவு சமையலர்கள் சம்பளம் ரூ.6, 562ல் இருந்து ரூ.8, 680 ஆக உயருகிறது.
40க்கும் மேற்பட்ட வகையான படிகள்
அரசு பணியார்களுக்கு வழங்கப்படும் 40க்கும் மேற்பட்ட வகையான படிகளும் உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் பெரும்பாலான படிகள் 100% உயர்த்தப்பட்டுள்ளது.