அழகிரி பேரணிக்கு வசதியாக ஆசிரியர் தின நிகழ்ச்சி நேரத்தை மாற்றிய தமிழக அரசு
சென்னை: சென்னையில் அழகிரியின் பேரணிக்கு "சிக்கல்" வராமல் தடுக்க அதிமுக அரசு உதவி செய்வதாக கூறப்படுகிறது.
கருணாநிதி மரணமடைந்த சில நாட்களில் கட்சி மற்றும் குடும்ப ரீதியாக அழகிரி பிரச்சினைகளை எழுப்பினார். திடீரென கருணாநிதியின் சமாதிக்கு வந்த அழகிரி தனது ஆதங்கத்தை கொட்டி தீர்ப்பேன் என்றும் எனது பலத்தை செப்டம்பர் 5-ஆம் தேதி நடத்தும் அமைதி பேரணி மூலம் ஒரு லட்சம் பேரை அழைத்து வந்து நிரூபிப்பேன் என ஒரு குண்டை போட்டார்.
இதையடுத்து கடந்த 10 நாட்களாக அவர் தனது ஆதரவாளர்களுடன் மதுரை வீட்டில் ஆலோசனை நடத்தினார். ஆரம்பத்தில் இருந்த கூட்டத்தை காட்டிலும் நாளுக்கு நாள் குறைந்ததால் தெரியாமல் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டோமோ என கோபம் அடைந்தார்.
இந்நிலையில் எப்படியோ காலை 10 மணிக்கு அழகிரியின் பேரணி திருவல்லிக்கேணியில் இருந்து தொடங்கியது. இதனிடையே காலை 11 மணிக்கு கலைவாணர் அரங்கில், நடக்க இருந்த ஆசிரியர் தின விழா கடைசி நேரத்தில், பகல் 3 மணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் எழுந்துள்ளது.
அழகிரி பேரணி நடத்தும் அதே சாலையில் முதல்வர் விழா நடத்தப்படுவதாக இருந்தது. இந்நிலையில் அழகிரி பேரணிக்கு எவ்வித சிக்கலும் வராமல் அரசு நிகழ்ச்சியின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.