கலாம் படித்த பள்ளிக்குள் கமலை அனுமதிக்காத அரசு, இதை மட்டும் செய்தது ஏன்?
Recommended Video
சென்னை: எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் சென்ற அதிமுக அரசு, அப்துல் கலாம் பயின்ற பள்ளியில், கமல்ஹாசன் செல்ல அனுமதி மறுத்துள்ளது.
அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட உள்ள கமல்ஹாசன், அப்துல்கலாம் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தாரை சந்தித்து ஆசி பெற்றார். பிறகு கலாம் பயின்ற பள்ளிக்கு அவர் செல்வதாக இருந்தது.
ஆனால், பள்ளி கல்வித்துறை, கமல் வருகைக்கு தடை விதித்துவிட்டது.
அரசியல் காரணம்
தனது வருகைக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசியல்தான் காரணம் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார் கமல்ஹாசன். பள்ளியில் அரசியல் நிகழ்வுக்கு எப்படி அனுமதி கொடுப்போம் என கேட்கிறது பள்ளிக் கல்வித்துறை. ஆனால் இதற்கான அரசியல் பல நாட்கள் முன்பே ஆரம்பித்துவிட்டது. கலெக்டரிடம் மனு கொடுத்து இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரிய நிகழ்வுகள் அரங்கேறின.
கலெக்டரிடம் மனு
இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த, மனுவில், நடிகர் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாகப் பள்ளிகளை அரசியல் தலமாக மாற்றி வருகிறார்கள். வெவ்வேறு கருத்துடைய அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் ஒரு கருத்தை மாணவர்களிடம் சொல்ல வருவதன் மூலம் மாணவர்களிடையே குழப்பம் ஏற்படுவதுடன், அவர்களின் கல்வியும் பாதிக்கப்படுகிறது என்பதால், அவரது நிகழ்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டது.
எம்ஜிஆர் நூற்றாண்டு
இதையே சாக்காக வைத்து, கமல் நிகழ்ச்சிக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதிமுக அரசு பெரும் பொருட்செலவில் நடத்திய எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க வைக்கப்பட்டனர். இதற்கு ஹைகோர்ட் தலையிட்டு தடை விதிக்கும் நிலை உருவானது.
மாற்றம் இந்தியா அமைப்பை சேர்ந்த நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், "எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் முதல்வர் எந்த பேச்சுகளையும் பேச வில்லையே" என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
அரசு தடை
ஆனால், இன்று கலாம் பள்ளியில் கமல் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிக்கு அதே அரசு தானாக முன்வந்து தடை விதித்துள்ளது. இது அரசின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதோடு, கமல் மீதான அச்சத்தை காட்டுவதாக கூறுகிறார்கள், அரசியல் விமர்சகர்கள். இதுபோன்ற அரசு நடவடிக்கைகள் அரசியல் களத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.