இம்மாதமே தமிழக அரசு கலைப்பு.. ஊழல் புகாரில் எடப்பாடி, ஓ.பி.எஸ் கைது: நமது எம்ஜிஆர் பரபரப்பு செய்தி
Recommended Video
சென்னை: தமிழக அரசு வரும் 25 அல்லது 26ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட உள்ளதாக 'அதிமுக அம்மா' கட்சி நாளிதழான நமது எம்ஜிஆர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஒரு பெட்டி செய்தியை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் பரபரப்பு ரகம்.
நமது எம்ஜிஆர் நாளிதழில் கூறப்பட்டுள்ள அந்த பெட்டி செய்தி வாசகங்கள் வரிக்கு வரி அப்படியே இதோ:
கைது செய்ய வாய்ப்பாம்
எடப்பாடி அரசு வருகிற 25 அல்லது 26ம் தேதி டிஸ்மிஸ் செய்யப்பட்டு, ஆளுநர் ஆட்சி அமலுக்கு வர இருப்பதாக தெரிகிறது. ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் உட்பட 23 அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் கசிகிறது.
திமுக ஆட்சி கலைப்பு
அமைச்சர்களின் பினாமி சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் ஆளுநர் வசம் உள்ளது. இதேபோல 1976ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி தி.மு.க ஆட்சியை இரவோடு இரவாக கலைப்பதற்கு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நடவடிக்கை எடுத்தார்.
ஆளுநரிடம் அதிகாரிகள் குழு
அப்போது ஆளுநரின் ஆலோசகர்களாக ஆர்.வி.சுப்பிரமணியம், பி.கே.தவே போன்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். அதேபோல தற்போதும், ஆளுநரின் ஆலோசகராக ஓ.ராஜகோபால் மற்றும் சோமநாதன் போன்ற மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆதாரங்கள் மறைப்பு
இதையறிந்த ஆளும் தரப்பினர்கள் ஆதாரங்களை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நெருக்கடியை எப்படி கையாளுவது என்ற அதிர்ச்சியில் குழம்பிப்போயிருக்கிறார்கள். இவ்வாறு நமது எம்.ஜி.ஆர் பத்திரிகை பெட்டி செய்தி கூறுகிறது.
சாத்தியமா?
இதுபோன்ற தகவல் சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதையேதான் நமது எம்.ஜி.ஆர் பயன்படுத்தியிருக்கலாம் என தெரிகிறது. அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை நடத்துவது திமுகவுக்குதான் சாதகம் என்பதால் அதை ஆளுநர் செய்வாரா என்பதே அரசியல் நோக்கர்கள் கேள்வி.