கோவையைத் தொடர்ந்து நெல்லையில் களமிறங்கும் ஆளுநர்... மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க ஏற்பாடு!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு டிசம்பர் 6ல் வருகை தரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி : திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனால் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க செல்லும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்கிறார். இந்த கூட்டத்தில் விருப்பமுள்ளவர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் வருகை குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது : திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 6ம் தேதி 25வது பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. பகல் 12.45 மணியளவில் நடைபெறும் விழாவை தலைமை தாங்கி நடத்தி வைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நெல்லை வருகிறார்.
அதன் பின்னர் திருநெல்வேலி வண்ணார்பேட்டை அரசினர் விருந்தினர் மாளிகைக்கு வரும் ஆளுநர் மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுநல அமைப்புகளின் பிரநிதிகள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க உள்ளார்.
எனவே ஆளுநரை சந்திக்க விருப்பமுள்ளவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை நேரில் சந்திக்கலாம் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். கோவையில் ஆளுநர் பன்வாரிலால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் என்று நிர்வாக ரீதியிலான ஆலோசனை கூட்டத்தை நடத்தியதால் சர்ச்சை ஏற்பட்டது.
இந்நிலையில் நெல்லையில் அனைத்து தரப்பினரையும் சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் தமிழக ஆளுநர் யாரும் இதுவரை செய்திடாத நிகழ்ச்சியாக ஆளுநர் பொதுமக்களையும் சந்திக்கிறார் அதற்கு ஆட்சியரே அறிக்கை வெளியிடுகிறார் என்பது தான் குறிப்பிடும்படியான விஷயம்.