ராஜ்நாத்சிங்கை தொடர்ந்து குடியரசு தலைவரை சந்தித்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்!
சென்னை: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று மாலை 4.30 மணியளாவில் சந்தித்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.
டெல்லியிலுள்ள வித்யாசாகர் ராவ், இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்குடன் ஆலோசனை நடத்தினார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகள் குறித்து ராஜ்நாத் சிங்குடன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், மாலை 4.30 மணியளவில் ராஜ்பாத்திலுள்ள, குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த்தை சந்தித்து ஆலோசித்தார். அப்போது தமிழகத்தில் நடைபெறும் அரசியல் நிகழ்வுகள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளுநருக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்துவரும் நிலையில், வித்யாசாகர் ராவின் அடுத்தடுத்த சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டுமா, எப்போது அதற்கான அவசியம் எழும், என்பது போன்ற ஆலோசனைகளில் வித்யாசாகர் ராவ் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. இதையடுத்து துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை ஆளுநர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
ராம்நாத் கோவிந்த், ஏற்கனவே பீகார் மாநிலத்தில் ஆளுநர் பதவியிலிருந்த அனுபவம் உள்ளவர் என்பது கவனிக்கத்தக்கது.