கோவையில் ஆளுநர் ஆய்வு செய்வது அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன் சாடல்
அதிகாரிகளுடன் ஆளுநர் ஆய்வு செய்வது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.
கோவை : கோவை மாவட்டத்தில் ஆளுநர் ஆய்வு மேற்கொண்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்து உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் பன்வாரிலால் புரோஹித். இவர் இன்று கோவை மாவட்டத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்க்கொண்டார். மேலும் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் , காவல்துறை ஆணையர் அமல்ராஜ், வருவாய்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார்.
ஸ்மார்ட் சிட்டிகள் பட்டியலில் கோவை இடம்பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அங்கு நடக்கும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறியவே ஆளுநர் ஆய்வு மேற்கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்று மாவட்ட அதிகாரிகளை மட்டும் சந்தித்துள்ள ஆளுநர் நாளை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி தலைவர்களோடும் ஆலோசனையில் ஈடுபடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், கோவை மாவட்டத்தில் ஆளுநர் திடீர் ஆய்வு மேற்கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை எந்த ஆளுநரும் மாவட்ட நிர்வாகத்தில் தலையிட்டது இல்லை என்றார்.
ஆனால் தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மாவட்ட நிர்வாகத்தில் தலையிட ஆளுநருக்கு உரிமை இல்லை என்று எந்த சட்டமும் இல்லை, ஆளுநர் தனது அதிகாரத்திற்கு உட்பட்டே செயல்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்து இருக்கிறார்.