எதிர்கட்சிகள் தொடர் கண்டனம் : திருப்பூரில் ஆய்வைத் தவிர்த்த ஆளுநர் பன்வாரிலால் !
எதிர்க்கட்சிகளின் தொடர் கண்டனத்தால் திருப்பூரில் ஆய்வுகளை ரத்து செய்து கோவை திரும்பினார் ஆளுநர்.
கோவை : நேற்று கோவையில் ஆய்வு நடத்திய ஆளுநருக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதனால் இன்று திருப்பூரில் நடக்க இருந்த ஆய்வு ரத்து செய்யப்பட்டது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார் பன்வாரிலால் புரோஹித். இவர் நேற்று கோவை மாவட்டத்தில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். கோவை மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
ஆளுநரின் இந்த திடீர் ஆய்வு மாநில சுயாட்சியில் தலையிடுவது போலவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இருக்கும்போது ஆளுநர் ஏன் ஆய்வு செய்கிறார் என்றும் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். அதுபோல, ஆளுநரின் ஆய்வை எதிர்த்து வி.சி.க தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்நிலையில் இன்று காலை கோவையில் சில இடங்களில் ஆய்வுகளை முடித்துவிட்டு திருப்பூர் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அங்கு மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமியோடு ஆலோசனை நடத்தினார். பின்னர் பெருமாநல்லூரில் விவசாயிகளைச் சந்தித்தார். அப்போது அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை மாநில அரசு நிறைவேற்றவில்லை அதனால் ஆளுநர் தலையிட்டு அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் மனுக்கொடுத்தனர்.
அதன் பின்பு அரசின் பசுமைத் தமிழகம் அமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பட்ட மரம் நடுவிழாவில் கலந்துகொண்டார் ஆளுநர். தமிழகம் முழுவதும் 7 கோடி மரம் நடும் இந்த திட்டத்தின் தொடக்கமாக முதல் மரத்தை ஆளுநர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்பினர் ஆளுநரின் இந்த வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மரம் நடும் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருப்பூரில் மாவட்ட அதிகாரிகளை சந்திக்க இருந்த ஆளுநர், அரசியல் தலைவர்கள் எதிர்ப்புகளால் அதிகாரிகளைச் சந்திக்காமல், ஆய்வு நடத்தாமல் மீண்டும் கோவை மாவட்டத்திற்கு திரும்பினார்.