மாவட்ட அரசு காஜிகளுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பூதியம், நிலுவை தொகையை வழங்கியது தமிழக அரசு!
மாவட்ட அரசு காஜிகளுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பூதியம், நிலுவை தொகையை தமிழக அரசு வழங்கியது
சென்னை: மாவட்ட அரசு காஜிகளுக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பூதியம், நிலுவை தொகையை தமிழக அரசு வழங்கியது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நீண்டநாள் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சமுதாயத்தின் திருமணங்களை பதிவு செய்தல், ஷரீஅத் சட்ட நடைமுறைகளை உறுதி செய்தல், பிறைப் பார்த்து நோன்பு, பெருநாட்களை அறிவிப்பு செய்து அரசுக்கு தெரிவித்தல் உள்ளிட்ட பணிகளை காஜிகள் என்று சொல்லக்கூடிய மார்க்க அறிஞர்கள் பல்லாண்டு காலமாக செய்து வருகின்றனர்.
காஜிகள் சட்டம் ஆங்கிலேயர்களுடைய ஆட்சி காலத்திலிருந்து நடைமுறையில் இருந்து வருகின்றது. இச்சட்டத்திற்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட காஜிகளை நியமிக்க வேண்டும் என்பதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அரசை தொடர்ந்து வலியுறுத்தியும், மஹல்லா ஜமாஅத் உள்ளிட்ட மாநாடுகளில் தீர்மான வடிவிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
1995 ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கோரிக்கையையேற்று அப்போதைய அதிமுக அரசு ஆலிம்களை சில மாவட்டங்களில் அரசு காஜிகளாக நியமித்தது.
2006 ஆம் ஆண்டு திமுக அரசு முஸ்லிம் லீக் கோரிக்கையையேற்று பெரும்பாலான மாவட்டங்களுக்கு இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோளையேற்று ஆலிம்களை மாவட்ட அரசு காஜிகளை நியமித்தது.
இ.யூ.முஸ்லிம் லீக் நடத்திய மஹல்லா ஜமாஅத் மாநாடுகளில் மாவட்ட அரசு காஜிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என தீர்மானங்களை நிறைவேற்றி அரசின் கவனத்திற்கு எடுத்து சென்றது.
முஸ்லிம் லீகின் தொடர் நடவடிக்கையின் பலனாக மாவட்ட அரசு காஜிகளுக்கு மாத ஊதியம் வழங்க அரசு 01.03.2016 அரசாணை (நிலை எண் 26) பிறப்பித்தது.
மாவட்ட அரசு காஜிகளுக்கு ழுஹஷ்நுகூகூநு டீகுகுஐஊநுசு அந்தஸ்து வழங்கவும், மாத ஊதியத்தை வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் கடந்த 30.08.2016, 15.06.2017, 20.06. 2017 மற்றும் 19.07.2017 என நான்கு முறை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பேசியதோடு, மாவட்ட அரசு காஜிகளை அழைத்துக் கொண்டு 03 06.2017 அன்று வக்ஃப் வாரிய அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீல் அவர்களை நேரில் சந்தித்து மாவட்ட அரசு காஜிகளுக்கு அரசு அங்கீகாரமும், அரசாணையை சுட்டிக்காட்டி மாத ஊதியமும் வழங்க வேண்டிய அவசியத்தை நேரில் வலியுறுத்தினார்.
தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாவட்ட காஜிக்கள் ஆற்றி வரும் சமூகப் பணியினை கருத்தில் கொண்டும், அவர்கள் அப்பணியினை எவ்வித குந்தகமின்றி தொடர்ந்திடும் வகையிலும், அவர்களால் பராமரிக்கப்படும் பதிவேடுகளின் பாதுகாப்பு, பணி நிமித்தமான அஞ்சலக மற்றும் போக்குவரத்து செலவுகளை கருத்தில் கொண்டும், மாவட்ட காஜிக்களுக்கு மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கிட அரசு 1.3.2016 அன்று அரசாணை வெளியிட்டது.
அதன்படி மாவட்ட காஜிகளுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கிட, தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு 1 கோடியே 40 லட்சம் ரூபாய் ஒப்பளிப்பு செய்து 6.3.2018 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. அதனடிப்படையில், மாவட்ட காஜிக்களுக்கு 1.3.2016 முதல் மாதந்தோறும் 20,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கும் திட்டத்தினை துவக்கி வைக்கும் அடையாளமாக, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 மாவட்ட காஜிக்களுக்கு நிலுவைத் தொகையுடன் சேர்த்து மொத்தம் 29 லட்சத்து 62 ஆயிரத்து 143 ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
காஜிகளுக்கு அரசு சம்பளம் வழங்கியதற்கு தமிழக அரசுக்கு குறிப்பாக வக்பு வாரிய அமைச்சர் டாக்டர் நிலோபர் கபீலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ., தமிழக முதல்வர், மாவட்ட காஜிகள் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்தனர்.