முருகன், பேரறிவாளன், சாந்தனை விடுதலை செய்ய உரிமை உண்டு.. மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வாதம்
டெல்லி : முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும், இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு ஏற்புடையது அல்ல என்றும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினியின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய 3 பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். இந்த மனுக்கள் 2011-ம் ஆண்டு நிராகரிக்கப்பட்டது.
கருணை மனுக்கள் மீது குடியரசுத்தலைவர் காலதாமதமாக முடிவு எடுத்ததால் அதை தண்டனை காலமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வு மனுவை விசாரித்தது. அப்போது 3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ததுடன் இவர்கள் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினர்.
இதையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளனுடன் ஏற்கனவே ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்து தமிழக அரசு கடந்த 19.2.2014-ல் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்தது. 7 பேர் மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால், அவர்களை விடுதலை செய்யும் அதிகார வரம்பு தமிழக அரசுக்கு வராது என்று மத்திய அரசு தனது மனுவில் கூறியது. இதற்கு தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்தது. அதில் 7 பேரை விடுதலை செய்ய அதிகாரம் உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.
இதையடுத்து 7 பேரை விடுதலை செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்தது. இதுபற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அவர் இந்த வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை நியமித்தார். 15-ந் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் என்றும் அறிவித்தார். அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜேஷ் திரிவேதி ஆஜரானார். அப்போது அவர், 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு ஏற்புடையது அல்ல. வேண்டும் என்றே எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்து இதை பெரிதுபடுத்தி உள்ளது. இது மாநில அரசுக்கு எதிரானது. எனவே தடையை நீக்க உச்சநீதிமன்றம் முன்வர வேண்டும் என்று வாதாடினார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை 21-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.