அமைச்சர்களுக்குதான் இயல்பு நிலை திரும்பியுள்ளது, மக்களுக்கு அல்ல... மு.க.ஸ்டாலின்
சென்னை: மீட்பு பணியில் மத்திய அரசுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்படவில்லை என தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் இன்று ஸ்டாலின் சந்தித்தார். பின்னர் வெளியில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது கூறியதாவது:
மழை வெள்ளத்தால் சென்னை, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணியில் மத்திய அரசுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்படவில்லை. இதனை நீதிமன்றம், ஊடகங்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் மட்டுமின்றி அ.தி.மு.க.வை சேர்ந்தவர்களும் தெரிவித்துள்ளனர்.
வெள்ள நிவாரணத்தில் அரசின் செயல்பாடு குறித்து வெளிப்படியாக தனது தருத்தை பதிவு செய்த முன்னாள் காவல்துறை அதிகாரி நட்ராஜ் அதிமுகவை விட்டு நீக்கப்பட்டுள்ளார். அந்த நிலையில் தான் இன்று நிவாரண பணிகள் நடைபெறுகிறது.
கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காதது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கருணாநிதி கவர்னரை நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது அரசாங்கம் மக்களுக்கு செய்துள்ள அக்கிரமங்களை எடுத்து சொல்லி, நடந்தது இயற்கை பேரிடரில்ல, செயற்கை பேரிடர் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தும், கேள்விகள் எழுப்பிய பிறகும் கூட ஜெயலலிதா இதுவரை ஒருமுறை கூட பத்திரிக்கையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கவில்லை. ஒருவேளை சட்டமன்றத்தை கூட்டி மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அதையும் செய்திட முன்வரவில்லை.
சென்னையில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அவர்களின் இயல்பு நிலைதான் திரும்பி இருக்கிறது. மக்களின் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை என்று கூறினார்.