திருப்பூர் குமரனை தடியால் அடித்த வெள்ளையர் நிலைதான் கொள்ளை அரசுக்கும்.. குமரி அனந்தன் எச்சரிக்கை
சென்னை: வெள்ளையர்களுக்கு ஏற்பட்ட நிலை தமிழக அரசுக்கு ஏற்படும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மதுவை ஒழிக்க நடை பயணம் மேற்கொண்டவருமான, குமரி அனந்தன் சாடினார்.
திருப்பூரில், டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி போராடிய, ஆண்கள்-பெண்கள் மீது போலீசார் காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தினர். ஒரு பெண்ணை, கொஞ்சமும் மரியாதையின்றி, ஆண் போலீஸ்காரர் ஒருவர் கன்னத்தில் அறைந்தார். பெண்ணின் கண்ணியத்திற்கு எதிரான தாக்குதலாக இது பார்க்கப்படுவதால் சட்டப்படி அந்த போலீஸ்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துள்ளன.
இந்த நிலையில், குமரி அனந்தன் இதுகுறித்து கூறுகையில், திருப்பூர் குமரனை தடிகொண்டு அடித்தனர் வெள்ளையர்கள். திருப்பூரில் மக்கள் மீது தடியடி நடத்தியுள்ளது கொள்ளை அரசு. திருப்பூர் குமரனை அடித்தவர்களுக்கு என்ன கதி ஏற்பட்டதோ, அதுதான் இந்த அரசுக்கும் ஏற்படும். வெள்ளையர்களை போல கொள்ளை அரசும் மக்களால் தூக்கி எறியப்படும் என்று தெரிவித்தார்.