தமிழகத்தில் தொகுதிக்கு 20 ஆயிரம் போலி வாக்காளர்கள்.. தேர்தல் ஆணைய புதிய சாப்ட்வேரால் அம்பலம்
சென்னை: போலி வாக்காளர்களை நீக்க புதிய சாப்ட்வேரை தேர்தல் ஆணையம் பயன்படுத்தி உள்ள நிலையில், சராசரியாக தொகுதிக்கு 20 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலின்போது, குறைபாடு உள்ள வாக்காளர் பட்டியலை வைத்துதான் தேர்தல் ஆணையம், தேர்தலை நடத்தியது. தற்போது வாக்காளர் பட்டியலை மேம்படுத்தி ஒழுங்குபடுத்தவும், போலி வாக்காளர்களை நீக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பட்டியலில் உள்ள வாக்காளர்களை வீடுதோறும் சென்று சரிபாக்கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் போலி வாக்காளர்களை கண்டுபிடிக்க புதிய சாப்ட்வேர் தயாரித்துள்ளது.
அதில், ஒரு தொகுதியில் ஒரு வாக்காளரின் பெயர், முகவரியை பதிவு செய்தால், அதே பெயர், தந்தை பெயர், முகவரி, வயது, புகைப்படம், உள்ள போலி வாக்காளர் விபரமும், வேறு தொகுதியில் இவர்கள் இருந்தாலும் இந்த புதிய சாப்ட்வேர் மூலம் கண்டுபிடித்து விட முடியும்.
இந்த புதிய சாப்ட்வேர் மூலம் தற்போது ஒவ்வொரு தொகுதியில் உள்ள போலி வாக்காளர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த புதிய சாப்ட்வேர் மூலம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 15 ஆயிரம் 20 ஆயிரம் வரை போலி வாக்காளர்கள் இருப்பதாக இதுவரை வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்தில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தது 20 ஆயிரம் போலி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.