சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது நிரூபணம்.. கருவேல மரம் வெட்ட பிறப்பித்த தடையை நீக்கிய ஹைகோர்ட்
சென்னை: தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வளந்திருக்கும் சீமைக்கருவேல மரங்களின் காரணமாக நிலத்தடி நீர் வளம் உள்ளிட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகள் ஏற்படுவதாகவும், அவற்றை அகற்ற உத்தரவைட வேண்டும் என்று கூறி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 11ம் தேதியன்று பிறப்பித்த உத்தரவில் இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
பொதுநல மனு
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீல் மேகநாதன் என்பவர் பொது நல மனு ஒன்றனை தாக்கல் செய்தார். அதில் "சீமைக்கருவேல மரங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை சீமைக்கருவேல மரங்களில் இருந்து எரிபொருள், காகிதம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன எனவே சீமைக்கருவேல மரங்களை வெட்ட கூடாது" என கூறியிருந்தார்.
இடைக்கால தடை
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கை 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி, அதுவரை சீமைகருவேல மரங்களை அகற்ற இடைக்காலத் தடை விதித்து ஏப்ரல் 28ம் தேதியன்று உத்தரவிட்டது. இதனை அடுத்து சீமைக்கருவேல மரங்களால் தீமையுள்ளதா என்பதை ஆய்வு செய்ய ஐ.ஐ.டி குழுவை அமைக்கக்கோரி மேகநாதன் கோரிக்கைவிடுத்தார்.
அறிக்கையில் அம்பலம்
இதனிடையே, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆய்வு செய்ய அரசு நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை நீதின்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சீமைக் கருவேல மரங்களினால் பாதிப்புகள் ஏற்படுவது பற்றி எடுத்துரைக்கப்பட்டிருந்தது.
தடை நீக்கம்
இதை ஏற்றுக்கொண்ட ஹைகோர்ட், மாநிலம் முழுவதும் சீமைக் கருவேல மரங்களை வெட்ட விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்கட்டமாக நீர் நிலைகளில் வளந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 13ம்தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.