குட்கா விவகாரம் போல விஸ்வரூபமெடுக்கும் வாக்கிடாக்கி ஒப்பந்த ஊழல்...டிஜிபிக்கு வந்தது அடுத்த தலைவலி!
காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்க ஒப்பந்தம் செய்ததில் விதிகள் மீறப்பட்டுள்ளதா என்று டிஜிபியிடம் தமிழக அரசு விளக்கம் கேட்டுள்ளது.
சென்னை : தமிழக காவல்துறைக்கு வாக்கிடாக்கி வாங்க ஒப்பந்தம் செய்ததில் விதிகள் மீறப்பட்டுள்ளதா என்று விளக்கமளிக்குமாறு டிஜிபிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக காவல்துறையின் அன்றாட நிகழ்வுகளை காவலர்கள் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்து கொள்வதில் முக்கியப் பங்காற்றுவது வாக்கி டாக்கி. இத்தகைய வாக்கி டாக்கிகளை புதிதாக காவல்துறைக்கு வாங்க எல் அண்ட் டி நிறுவனத்துக்கு ரூ.84 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து விதிமீறல்கள் உள்ளனவா என்று டிஜிபி டி.கே.ராஜேந்திரன் விளக்கமளிக்குமாறு உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். இதில் தமிழக ஒப்பந்த விதிகளுக்கு எதிராக ஒரே நிறுவனத்திற்கு மட்டும் ஏன் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில் ஒப்பந்தம்?
ஒப்பந்தத்திற்கு ஏற்ப உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காத நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்? வாக்கி டாக்கி போன்ற தொலைதொடர்பு சாதனங்களை வாங்கித் தர அனுபவமில்லாத நிறுவனத்திடம் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது ஏன்? எந்த அடிப்படையில் எல் அண்ட் டிக்கு ஒப்பந்தம் ஒதுக்கப்பட்டது என்று சரமாரியாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
டிஜிபிக்கு உள்துறை செயலாளர் கடிதம்
அலைக்கற்றையைக் கையாள உரிய அனுமதி பெறாத நிறுவனம் எப்படி ஒப்பந்தத்தை பெற்றது. ரூ. 84 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் போடப்படுவது குறித்து அரசுக்கு முறையாக தெரிவிக்கப்பட்டதா என்றும் நிரஞ்சன் மார்டி கடிதத்தத்தில் டிஜிபிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
எப்படி இறுதி செய்யப்பட்டது?
ஒப்பந்தம் இறுதி செய்யப்படுவதற்கு எந்த தொழில்நுட்பத் தரவுகள் பயன்படுத்தப்பட்டன. ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்த பிறகு ஒப்பந்தத் தொகையில் வரிபிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்றும் அரசு கேள்வி எழுப்பியுள்ளது.
வல்லுநர்கள் ஒப்புதலுடன்
அரசின் கேள்விகளுக்கு காவல்துறை தரப்பில் அளிக்கப்படும் பதில் என்னவென்றால். வேறு எந்த நிறுவனங்களும் ஒப்பந்தத்திற்கு முன்வராததால் எல் அண் டி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதாகவும். அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பக் குழுவின் அனுமதியுடன் ஒப்பந்தம் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
விதிகளுக்கு உட்பட்டே
விதிகளை முறையாக பின்பற்றியே வாக்கி டாக்கி வாங்குவதற்கான ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. விதிகளுக்கு உட்பட்டு டெண்டர் கோரிய ஒரே ஒரு நிறுவனத்திற்குத்தான் அந்த ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். இந்தப் பதில்களையே அரசுக்கு அறிக்கையாக அவர்கள் அளிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
விஸ்வரூபமெடுக்கும் அடுத்த பிரச்னை
குட்கா விவகாரத்தில் டிஜிபி ராஜேந்திரன் லஞ்சம் வாங்கியதாக பெரும் தலைவலி இருந்து வருகிறது. இந்நிலையில் வாக்கி டாக்கி வாங்க ஒப்பந்தம் அளித்ததில் முறைகேடு என அடுத்த பிரச்னை விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியுள்ளது.