தி.நகரில் இளைஞர் மீது தாக்குதல்: 2 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
இளைஞரை தாக்கிய போக்குவரத்து போலீசார் 2 பேருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.
Recommended Video
சென்னை: தி.நகரில் இளைஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்துடன். இளைஞரை தாக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் இருவரும் வரும் 18-ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சாலிகிராமம், ஜானகிராமன் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் 21. இவர் சென்னை தியாகராய நகரில் இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல், தனது தாய், சகோதரியுடன் கடந்த திங்களன்று சென்றுள்ளார். இதனால் அங்கிருந்த போக்குவரத்து காவலர்கள் பிரகாஷை தடுத்து நிறுத்தி உள்ளனர்.
அப்போது, போலீசாருக்கும், பிரகாஷூக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பிரகாஷை போலீசார் கடுமையாக தாக்கியதுடன், அவரை கைது செய்து சிறையிலும் அடைத்தனர்.
போக்குவரத்து போலீசார் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் நாளிதழ்களிலும் இச்செய்திகள் வெளிவந்தவண்ணம் இருந்தன. இதனால் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
அதன்படி, போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் இருவருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதில், இளைஞரை தாக்கிய போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயராமன் மற்றும் சிறப்பு உதவி சுரேஷ் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை உத்தரவிட்டுள்ளது. இருவரும் வரும் 18-ம் தேதி 10 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது.
இதே போல், இந்த விவகாரம் குறித்து 4 வார காலத்திற்குள் விளக்கம் அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.