ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மகுடம் சூடப்போவது யார்?... களைகட்டும் 'பெட்டிங்'!
ஆர்கே நகர் இடைத்தேர்தல் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டிருக்கும் நிலையில் சேலத்தில் வெள்ளி கட்டி பெட்டிங்கும் களை கட்டுகிறதாம்.
Recommended Video
சென்னை : ஆர்கே நகர் தேர்தல் முடிவகள் தமிழக அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சக்தியாக பார்க்கப்படுவதால் சென்னை, சேலம் என பல இடங்களில், தங்கம், வெள்ளி, ரொக்கம் வைத்து நடத்தப்படும் பெட்டிங் சூடுபிடிக்கிறதாம். ஆனால் இவற்றிற்கான ஆதாரம் சிக்காததால் நடவடிக்கை எடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் 11ம் சட்டமன்ற தொகுதி. வட சென்னை மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாக உள்ள இதன் சட்டமன்ற தொகுதி எல்லைகளாக இராயபுரம், துறைமுகம், பூங்கா நகர், பெரம்பூர், திருவொற்றியூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஆர்கே நகர் தொகுதியில் 2.28 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எங்கள் தொகுதி பிரச்னைகளை கேட்பதற்கு எந்த அரசியல் பிரதிநிதியும் இல்லை என்று கவலைப்பட்டனர் ஆர்கே நகர் மக்கள், அதே சமயம் இந்த ஆண்டு ஆர்கே நகர் மக்களுக்கு செல்வசெழிப்பான ஆண்டாக மாறியது. இரண்டு முறை அறிவிக்கப்பட்ட இடைத்தேர்தல்களில் வெற்றிக்காக காசை தண்ணியாக வாரி இறைத்த அரசியல் கட்சிகளால் மக்களின் மாத செலவில் பற்றாக்குறை ஏற்படவில்லை.
சூடு பிடிக்கும் பெட்டிங்
இந்நிலையில் அதிமுகவா, திமுகவா, தினகரனா யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் கிளம்பியுள்ளது. இந்த நிலையில், ஆர்.கே நகரில் ஜெயிப்பது யார் என்பதில் பெட்டிங் நடக்கிறது.
சவுகார்பேட்டையும் பிசி
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் 5 கிலோ, சிவதாபுரம், பனங்காடு, மணியனூரில் 3 கிலோ வரை வெள்ளிக்கட்டிகளும், அதேபோல் 100 ரூபாய் முதல் லட்சக்கணக்கில் பந்தயம் கட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடமாநிலத்தைச்சேர்ந்த தொழிலதிபர்கள் அதிகம் வசிக்கும் செளகார்பேட்டையிலும் பெட்டிங் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லாபத்தை பொறுத்து
இங்கும் தங்கம், வெள்ளி, ரொக்கம் பந்தயத்தில் கட்டுப்பட்டு வருகிறது. போன் மூலம், பந்தய தொகையை சொல்லிவிட்டு, ரகசிய எண் பெற்றுக்கொள்ளலாம். அந்த எண்ணைக்கொண்டு தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு வெற்றி பெற்றால் லாபத்தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த வகையில் தான் பெட்டிங் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
ஆதாரங்கள் இல்லை
பந்தயம் நடக்கும் இடங்களில் மாறுவேடத்தில் போலீசார் ரோந்து வரவுள்ளதாகவும், தொலைப்பேசி அழைப்புகளைக்கொண்டு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சரியான ஆதராங்கள் எதுவும் சிக்காததால் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர் காவல்துறையினர்.