பொங்கல் நெருங்குது.. துள்ளிகிட்டு ஓடிவர தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்
பொங்கல் விழா நெருங்குவதையொட்டி ஜல்லிக்கட்டுக்கு காளைகளை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.
Recommended Video
மதுரை : பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சி உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் உற்சாகத்துடன் பயிற்சி அளித்து வருகிறார்கள்.
பொங்கல் பண்டிகை என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு . மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு அவனியாபுரம் கிராமங்களில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த தொடர் சிக்கல்கள் எழுந்து வந்ததால், அப்பகுதி மக்கள் உற்சாகம் இழந்து காணப்பட்டனர். ஆனால், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு விலங்குகள் வதை சட்டத்தில் இருந்து சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த இருந்த தடை விலகியது.
இதனால் இந்த ஆண்டு காளை மாடுகளின் உரிமையாளர்கள் உற்சாகத்தோடு தயாராகி வருகிறார்கள். இப்போட்டிகளில் பங்கேற்கும் தங்களது காளைகள் வெற்றி பெறவேண்டும் என காளை வளர்ப்போர் நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, மணல் மேட்டில் கொம்புகளை குத்த விடுதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை தங்களது காளைகளுக்கு அளித்து வருகின்றனர்.
மேலும், காளைகளுக்கு சத்தான உணவு வழங்குவதோடு, அவற்றிற்கு தொடர் மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மாடு வளர்ப்பவர்கள் கூறுகையில், இந்தக் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளை வாங்கி வரும்போது அதை தங்கள் வீட்டில் ஒருவர் வெற்றி பெற்றதைப் போல உணர்வதாகத் தெரிவித்து உள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை கோவை தூத்துக்குடியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது மிகுந்த மகிழ்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பதிவு செய்யப்படும் காளைகள் அனைத்தும் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் போட்டி நேரத்தை மாலை 5 மணி வரை நீட்டிக்க வேண்டும் என மாடு வளர்ப்பவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். அதனை செயல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை யாரும் துன்புறுத்துவது கிடையாது. மேலும் ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களை அனுமதிக்காமல், இடத்திற்கு ஏற்றார்போல் குறைவான மாடுபிடி வீரர்களை அனுமதிக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.