காவிரி.. எடப்பாடியாரை சந்திக்காமல் புறக்கணிக்கும் சித்தராமையா! புதிய வழக்கு தொடர தமிழக அரசு திட்டம்
காவிரி நீர் விவகாரத்தில் புதிய வழக்கு தொடர தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக முதல்வர் இதுவரை நேரம் ஒதுக்காததால் புதிய வழக்கு தொடர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
காவிரியில் இருந்து ஆண்தோறும் 192 டிஎம்சி தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக அரசோ வெறும் 111 டிஎம்சி தண்ணீரை மட்டுமே திறந்துள்ளது. மீதமுள்ள 82 டிஎம்சி நீரை திறந்து விட கர்நாடகா மறுப்பு தெரிவித்துள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரியில் நீர் திறப்பது தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக நேரம் ஒதுக்குமாறு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு அரசாணையில், டெல்டா பாசனத்திற்கு போதுமான அளவு தண்ணீர் இல்லாததால், காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்துவது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டெல்டா மாவட்ட அமைச்சர்களுடன் கடந்த திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.
முதல்வர் மற்றும் டெல்டா மாவட்ட அமைச்சர்கள் பெங்களூரு சென்று கர்நாடக முதல்வர் சித்தராமையாவை நேரில் சந்தித்து காவிரி நீரை திறந்துவிட வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டதாகவும், இதற்காக நாள் மற்றும் நேரம் ஒதுக்கக் கோரி கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலாளருக்கு கடிதம் மற்றும் தொலைபேசி மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடந்த இரு நாட்களுக்கு முன்னர் முதல்வர் சித்தராமையாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் தமிழக முதல்வர் அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றது. அவருக்கு நேரம் ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார்.
இந்நிலையில் இதுவரை கர்நாடக அரசு நேரம் ஒதுக்காததால் துணை முதல்வர் ஓபிஎஸ், சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மூத்த அமைச்சர்கள் ஆகியோருடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் கர்நாடக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டும் சந்திப்பு இதுவரை உறுதி செய்யப்படாதது குறித்து பேசப்பட்டது.
கர்நாடக முதலமைச்சர் நேரம் ஒதுக்காவிடில் வரும் 5 ஆம் தேதி புதிய வழக்கு தொடர்வது குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சம்பா பயிரை காக்க சட்ட ரீதியாக அணுக பரிசீலனை செய்து வருவதாக துணை முதல்வர் ஓபிஎஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.