இந்தியாவில் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் - கனிமொழி குற்றச்சாட்டு
திருவள்ளூர்: சட்டம் ஒழுங்கு சீரழிந்து பாதுகாப்பில்லாத மாநிலமாக திகழ்வதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி திமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக மாநிலங்களவை எம்.பி. தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக நேற்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பரிமளத்தை ஆதரித்து கனிமொழி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், மக்களுக்காக என்றும் மக்களோடு இருப்பவர் திமுக தலைவர் கருணாநிதி தான். நமக்கு நாமே பயணத்தின் மூலம் மக்களை சந்தித்தவர் ஸ்டாலின் என்றார்.
மேலும் அவர் பேசுகையில், கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதாகவும் அதிமுக ஆட்சியில் இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் அதிகரித்து ஆண்கள் கூட வெளியே செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார். மேலும் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, இந்தியாவிலேயே பாதுகாப்பில்லாத மாநிலமாக திகழ்வதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார்.
இதையடுத்து கும்மிடிப்பூண்டி தொகுதி மக்கள் தேமுதிக வேட்பாளர் சேகரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்கு தான் என கூறினார். அதிமுக ஆட்சியில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தவில்லை எனவும், தொழிற்சாலைகளை நிறுவ நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.