கர்நாடகத்திற்கு 27-ந் தேதி வரை லாரிகளை இயக்காதீர்கள்.. லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்
நாமக்கல்: கர்நாடகாவில் தொடரும் வன்முறை காரணமாக தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கு வருகிற 27ந் தேதி வரை லாரிகளை இயக்க வேண்டாம் என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.
நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட சுமார் 70 லாரிகள் மற்றும் 50 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன. மேலும் தமிழர்களுக்கு சொந்தமான நிறுவனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
தற்போதும் இதே நிலை நீடிப்பதால் கடந்த சில நாட்களாக கர்நாடகாவுக்கும், அம்மாநிலம் வழியாக வட மாநிலங்களுக்கும் லாரிகளை இயக்க முடியாமல் திணறி வருகிறோம். இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. அதேபோல் தினசரி ரூ.1,500 கோடி வீதம் வர்த்தகம் பாதிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு கருதி, கர்நாடகாவில் சுமூக நிலை வரும் வரை, தமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்கும், கர்நாடக மாநிலம் வழியாக வட மாநிலங்களுக்கும் லாரிகளை இயக்க வேண்டாம் என்று கூறினார்.
மேலும், கர்நாடக அரசை கண்டித்து இன்று நாமக்கல்லில் உண்ணாவிரதம் நடைபெற உள்ளது. திங்கள்கிழமை வெளியான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகு தமிழக காவல்துறை அதிகாரிகள் வருகிற 27-ந் தேதி வரை கர்நாடகாவிற்கு லாரிகளை இயக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். எனவே வருகிற 27-ந் தேதி வரை லாரி உரிமையாளர்கள் யாரும் கர்நாடகாவுக்கு லாரிகளை இயக்க வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.