3 நாளைக்கு மழை கொட்டப்போகுது மக்களே எச்சரிக்கை! - வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : காற்று மண்டல கீழடுக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்துப்போனதால் வறட்சியும், கடுமையான குடிநீர் பிரச்சினையும் நிலவுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையாவது ஓரளவுக்கு பெய்து கை கொடுக்குமா என்று மக்கள் காத்திருந்தனர். ஆனால் தென்மேற்குப் பருவமழையும் இயல்பை விட 28 சதவீதம் குறைவாகவே பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது.
வறண்டு காய்ந்து கிடக்கும் நிலங்கள் கோடையில் வெயில் மக்கள் வாரிச் சுருட்டிப் போட்டது. ஆடி பட்டம் தேடி விதைக்கனும், ஆடிக் காற்றில் அம்மி கூட பறக்கும் என்றெல்லாம் பாடி வைத்தார்கள் முன்னோர்கள்.
ஆடிக் காத்தும் மாறிப்போச்சா?
ஆனால் இந்த ஆண்டு ஆடி மாதமோ வெளியில் தலைகாட்டினால் சுள்ளென சுட்டெரிக்கும் சூரியன் பல்லைக் காட்டுகிறது. பகலில் வாட்டும் வெயில் இரண்டாவது கோடை காலமோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
பரவலாக மழை
இந்நிலையில் ஆந்திர கடலோரம் முதல் குமரிக்கடல் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது. இதன்காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி ஊடாக குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவானது.
வெப்பசலனம்
மேலும் மேற்கு நோக்கி வீசும் காற்று வலுப்பெற்றுள்ளது. வெப்பச்சலனமும் உள்ளது. இத்தகைய காரணங்களால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னையிலும் நேற்று இரவு முதல் சாரல் மழை பெய்ததால் இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.
3 நாட்களுக்கு மழை வாய்ப்பு
இந்நிலையில் காற்று மண்டல கீழடுக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்குத் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.