எந்த நகரங்களுக்கு பெண் மேயர்கள்? எந்த மாநகராட்சிகள் எஸ்.சி பிரிவுக்கு? லிஸ்ட் வெளியிட்ட தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு பட்டியல் தமிழக அரசால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பெண்களுக்கான மாநகராட்சி மேயர் பதவி இடங்கள், எந்தந்த நகரங்களுக்கு என்று இந்த பட்டியலில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி இடங்களுக்கு டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற தேர்தல் தொடர்பாக இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில் மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வேலூர் மாநகராட்சி மேயர் பதவி, தாழ்த்தப்பட்ட ஜாதி பிரிவை சேர்ந்த பெண்ணுக்காக ஒதுக்கப்படுகிறது.
ஒரு தரம்.. ரெண்டு தரம்.. ஊராட்சிமன்றத் தலைவர் பதவி 25 லட்சத்துக்கு ஏலம்..!
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பிரிவுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்தவராக இருந்தால் மேயராக முடியும்.
மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, நாகர்கோவில், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சி மேயர் பதவி இடங்கள், பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்படுகிறது. எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும், பெண்ணை மட்டுமே, இந்த மாநகராட்சிகளில் மேயராக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த பட்டியல்படி, சென்னை, சேலம், திருப்பூர், தஞ்சாவூர், ஒசூர் மற்றும் ஆவடி ஆகிய 6 மாநகராட்சி மேயர் பதவியிடங்கள், பொது பிரிவின்கீழ் வருகிறது.