செயிண்ட் லூசியா தீவு கடலில் மூழ்கி கோவை மருத்துவ மாணவர் உள்ளிட்ட 2 இந்தியர் உயிரிழப்பு
செயிண்ட் லூசியா தீவு கடலில் மூழ்கி கோவை மருத்துவ மாணவர் உயிரிழந்தார்.
கோவை: மேற்கு இந்திய தீவுகளில் உள்ள செயின்ட் லூசியா தீவில் கடலில் மூழ்கி தமிழக மருத்துவ மாணவர் உள்ளிட்ட 2 இந்தியர்கள் உயிரிழந்தனர்.
கோவை மாவட்டம், அன்னூரை சேர்ந்தவர் கங்காதரன் 55. இவரது மனைவி தேவி 44. இவர்களது மூத்த மகன் புவனகங்கேஸ்வரன் மேற்கு இந்திய தீவின் செயின்ட் லூசியா தீவில் உள்ள அறிவியல் பல்கலையில் மருத்துவம் படித்து வருகிறார்.
2ம் ஆண்டு படிப்பு முடிந்ததை கொண்டாடும் வகையில், அங்குள்ள கடற்கரையில் நேற்று சிறப்பு நிகழ்ச்சியை மாணவர்கள் கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது, சிலர் பாறை மீது ஏறி புகைப்படம் எடுக்க முயன்றனர்.
இதில், புவனகங்கேஸ்வரன் மற்றும் பெங்களூருவை சேர்ந்த இந்துமதி 19 ஆகியோர் கடலில் தவறி விழுந்தனர். இதில் ராட்சச அலையில் சிக்கி இருவருமே தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
மாணவர்கள் இருவரையும் காப்பாற்ற பல்கலையில் பேராசிரியராக பணிபுரியும் சேலத்தை சேர்ந்த பூபதி என்பவர் முயன்றார். ஆனால் அவரும் நீரில் அடித்து செல்லப்பட்டார்.
இது தொடர்பாக , புவனகங்கேஸ்வரன் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உடலை சொந்த ஊர் கொண்டு வர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் தற்போது அங்கு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் என்பதால், சடலத்தினை கொண்டு வர 7நாட்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.