விஷால் என்ன சூரப்புலியா நாங்க பயப்படுறதுக்கு... ராஜேந்திர பாலாஜி கேள்வி!
நடிகர் விஷால் என்ன சூரப்புலியா அவரைப் பார்த்து அதிமுக பயப்படுவதற்கு என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : நடிகர் விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்த இரண்டு பேரைக் காணவில்லை என்று எங்களிடம் சொன்னால் நாங்கள் கண்டுபிடித்துத் தருகிறோம் என்று விஷாலை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேலி செய்துள்ளார்.
நடிகர் விஷால் தனது வேட்பு மனு ஆர் கே நகரில் நிராகரிக்கப்பட்டதற்கு அதிமுக தான் காரணம் என்று குற்றம்சாட்டி வருகிறார். அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் ஆட்களே தனது வேட்புமனுவை முன்மொழிந்த சுமதி, தீபக் இருவரையும் மிரட்டி பின்வாங்க வைத்துள்ளதாக கூறினார்.
மேலும் சுமதி, தீபக்கை காணவில்லை என்றும் அவர்களது வீட்டில் ஆளும் கட்சியை சேர்ந்த ஆட்கள் தொடர்ந்து முகாமிட்டு மிரட்டி வருவதாகவும் விஷால் புகார் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் விஷாலின் புகார் குறித்து கருத்து தெரிவித்துள்ள பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் விஷால் என்ன சூரப்புலியா அவரைப் பார்த்து அதிமுக பயப்படுவதற்கு என்று தெரிவித்துள்ளார்.
மேலும் முன்மொழிந்த 2 பேரைக் காணவில்லை என்றால் எங்களிடம் வந்து சொல்லி இருக்கலாமே. நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்து தந்திருப்போமே என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். விஷால் ஆர்கே நகரில் சுயேச்சையாக போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளியான போதே 2 மாதத்திலேயே விஷாலின் அரசியல் கனவோடு, திரை வாழ்க்கையும் அஸ்தமித்துப் போகும் என்று விமர்சித்திருந்தார் ராஜேந்திர பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.