ஆளுநர் மாளிகையிலிருந்து அப்பல்லோ விரைந்த ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி #jayalalithaa
சென்னை: தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இன்று மாலை சந்தித்து பேசினர். இதையடுத்து தற்போது முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு அவர்கள் இருவரும் வந்துள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் 22ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் இன்று மதியம் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாலையில் மீண்டும், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் ஆளுநர் மாளிகை வந்தார் ராமமோகன்ராவ். அந்த ஆலோசனையின்போதும், தலைமை செயலாளர் உடனிருந்தார்.
இந்த சந்திப்புக்கு பின்னர் உடனடியாக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனை விரைந்தனர். தலைமைச் செயலாளர் ராமமோகன ராவும் அப்பல்லோ வந்துள்ளார். மேலும் சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜூ, துரைக்கண்ணு, பெஞ்சமின் ஆகியோரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
ஆளுநரை சந்தித்து இரண்டு முறை ஆலோசனை நடத்திய நிலையில் அமைச்சர்கள் அப்பல்லோவில் கூடியுள்ளனர். இதனால் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என கருதப்பட்டது. இந்நிலையில் காவிரி பிரச்சினை குறித்து ஆளுநரை சந்தி்த்து அமைச்சர்கள் விளக்கம் அளித்ததாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.