விஜய் அரசியல் பேச்சால், தமிழக அமைச்சர்களிடையே கருத்து வேறுபாடு!
Recommended Video
சென்னை: நடிகர் விஜயின் அரசியல் பேச்சு தமிழக அமைச்சர்களிடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது.
சர்கார் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில், அதிமுக அரசை மறைமுகமாக தாக்கி பேசினார் விஜய். இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து வருவாய் துறை அமைச்சர் உதயகுமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் விஜயை கடுமையாக விமர்சனம் செய்தார்.
பலூன் விற்பவர்
உதயகுமார் கூறியதாவது: பலூன் விற்பவர், ராட்டினம் சுற்றுபவர், பஞ்சுமிட்டாய் விற்பவர் என எல்லோரும் திருவிழாவிற்கு வருவார்கள். ஆனால் அங்குதான் சாமியும் இருக்கும். வித்தைகாட்டும் பலூன் விற்பனை செய்பவருக்கும் சாமிக்கும் வித்தியாசம் உள்ளது. ராட்டினம் ஓட்டுபவர் சட்டென்று சாமியாகலாம் என்று முயற்சி செய்வார். ஆனால் தங்களிடம் ராட்டினம் ஏற வருபவரையும், பொம்மை வாங்குபவரையும், பலூன் வாங்குபவரையும் பார்த்துவிட்டு தான்தான் சாமி என்று நினைத்துவிடக்கூடாது. சாமி வேறு. இந்த ஆட்சியில் ஜெயலலிதாதான் சாமி.
விஜய் அப்பா ஆசை
விஜயின் தந்தை, விஜயை அரசியலில் குதிக்க வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு கொண்டு, நான் பார்த்து கொள்கிறேன் நீ குதி என்று சொல்லி வருகிறார். ஆனால் அவர் பயந்து கொண்டே இருக்கிறார். இரண்டு ரசிகர்கள் இருந்த உடனேயே தன்னை எம்ஜிஆர் என்று அவர் நினைத்துக் கொள்கிறார். தமிழகத்தில் தற்போது ஒரு அரசியல் டிரெண்ட் உள்ளது. யார் வந்தாலும் அம்மா அரசை குறை சொன்னால் அவர்கள் ஹீரோ ஆகிவிடலாம் என்று நினைக்கிறார்கள்.
திட்டுவது ஹாபி
எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்செல்வம் எல்லோருமே சாமானியர்கள்தான். எனவே திட்டி தான் பார்ப்போம். இதற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் தருகிறார்கள், என்று வந்து திட்டுகிறார்கள். அவர்கள் திட்டுவது எங்களை அல்ல, தமிழ்நாட்டு மக்களை. என்ன வசனம் எழுதிக் கொடுக்கிறார்களே அதற்கேற்ப வசனம் பேசுவது தான் உங்கள் வேலை. அதை சரியாகப் பாருங்கள். நாங்கள் தான் நாட்டை சரியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு நாட்டு மக்கள் ஏதாவது சொன்னார்களா? விஜய் சார், விஜய் சார் இந்த நாட்டில் எதுவுமே சரியில்லை. நீங்கள் ஏன் நடிக்கப் போகிறார்கள்? வாங்க.. என்று!
கேரவனில் ஓய்வு
நீங்கள், முதல்வராக வேஷம் கட்டலாம். மக்கள் ரசிப்பார்கள். முதல்வராக பணியாற்றுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஒரு மணிநேரம் வசனம் பேசிவிட்டு 3 மணிநேரம் கேரவனில் ரெஸ்ட் எடுப்பவர்கள் நீங்கள். விஜய் தம்பி, சர்க்கஸ் காட்டுவதை காட்டட்டும், எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அமைச்சர் மாபா பாண்டியராஜன், விஜயின் பேச்சுக்கு வித்தியாசமாக பதிலளித்துள்ளார்.
பாண்டியராஜன் வேறு கருத்து
விஜய் அரசியலுக்கு வருவதற்கு அனைத்து உரிமைகளும் உள்ளது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் இவரைப் போன்ற புதுவரவுகளுக்கு எல்லாம் அச்சப்படும் நிலையில் அதிமுக இல்லை, என்று பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதன்மூலம் உதயகுமார் மற்றும் பாண்டியராஜன் ஆகிய இரு அமைச்சர்களும், விஜய்யின் அரசியல் பேச்சை எடுத்துக் கொள்ளும் விதம் என்பது மாறுபட்டு உள்ளதை குறிக்கிறது. விஜய் அரசியல் வருகை அமைச்சர் உதயகுமாருக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் பாண்டியராஜன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாததை போல காட்டிக்கொண்டுள்ளார்.