மழை வருமாம்.. தமிழகம் முழுக்க வருண பூஜை நடத்திய அமைச்சர்கள்.. குளங்களை தூர்வாரிய ஸ்டாலின்
சென்னை: பருவமழை ஏமாற்றியதால், தமிழகம் முழுவதும் ஏரி குளங்கள் வறண்டு கிடக்கின்றன. இதையடுத்து அமைச்சர்கள் வருண பூஜை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மழை பெய்து, ஏரி குளங்கள் நிரம்பவேண்டும் என்பதற்காக, இந்து சமய அறநிலைய துறை சார்பில், திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயிலில், வருண பகவானுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.
இதில், ஊரக தொழிற்துறை அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் தொகுதி எம்.பி. வேணுகோபால், பொன்னேரி எம்எல்ஏ சிறுனியம் மலராமன், பூவிருந்தவல்லி எம்எல்ஏ ஏழுமலை ஆகியோர் கலந்துகொண்டனர். அங்க வஸ்திரம், மாலைகள் அணிந்துகொண்டு கோவில் குளத்துக்கு சென்று மலர் தூவி யாகத்தை நிறைவு செய்தனர்.
காஞ்சியில் அர்ச்சனை
காஞ்சிபுரத்தில் மழை பெய்வதற்காக, காஞ்சி கச்சேஷ்பரர் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில் வருண யாகம் நடைபெற்றது. அப்போது, 20 அர்ச்சகர்கள் குளத்தில் அமர்ந்தபடி வேதமந்திரங்கள் ஓதி மழை வேண்டி வருணபகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்தனர். குடத்தில் இருந்த புனித நீரை குளத்தில் ஊற்றினர்.
திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருள்மிகு அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில், மழைவேண்டி நடைபெற்ற வருண யாகத்தில், வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தஞ்சையில்
தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் ஸ்ரீநாகநாத ஸ்வாமி ஆலயம், திருவலஞ்சுழி ஸ்ரீ கபர்தீஸ்வரர் ஆலயம், சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி ஆலயத்திலும் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில், வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு, எம்பி ஆர்.கே.பாரதிமோகன், தஞ்சை எம்எல்ஏ ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம்
நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் மழைவேண்டி சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. நாகை மயிலாடுதுறையில், எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் தலைமையில் கழுத்தளவு தண்ணீரில் நின்றபடி சிறப்பு யாகம் நடைபெற்றது. அதேநேரம், தமிழகத்தில் நடக்கும் மணல் கொள்ளையை அதிமுக அரசு தடுத்தாலே நிலத்தடி நீரை காப்பாற்றிவிடலாம் என்பது பொதுமக்கள் கருத்தாக உள்ளது.
குளம் தூர்வாரும் பணியியில் ஸ்டாலின்
ஒருபக்கம் மழைக்காக அமைச்சர்கள் யாகம் நடத்திய நிலையில், மழை பெய்த பிறகு தண்ணீர் வீணாகாமல் சேமித்து வைப்பதற்காக, திமுக சார்பில் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் குளங்களை தூர்வாரும் பணி நடைபெற்றது. திருச்சி மாவட்டம் தென்னூர் வீரியபெருமாள் கோவில் குளத்தை தூர்வாரும் பணியை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் கரூர் மாவட்டத்தில், குளித்தலை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நாகனூர் மற்றும் நாதிப்படடி கிராம குளங்கள் தூர்வாரும் பணியை ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.