பொன் விழா கண்ட "தமிழ்நாடு".. தியாகி சங்கரலிங்கனாரை கொண்டாடுங்கள்..!
தமிழ்நாடு இன்று பொன் விழாவை கொண்டாடுகிறது.
சென்னை: தமிழ்நாடு பொன் விழா கண்டிருக்கிறது!
சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களை பிரிக்கப்பட, 1956-ம் ஆண்டு "மெட்ராஸ் ஸ்டேட்" என அழைக்கப்பட கொதித்தெழுந்தார் சங்கரலிங்கனார்.
பசியாவது, சாப்பாடாவது... "தமிழ் கூறும் நல்லுலகம் இது... 'மதராஸ் மாகாணம்' என்றா பெயர் இருப்பது... கூடாது... கூடவே கூடாது.. தமிழ்நாடு என பெயர் மாற்றுங்கள்" என்று கூறி உண்ணவிரதம் இருக்க ஆரம்பித்தார் சங்கரலிங்கனார்.
ஒருநாள் இல்லை, இரண்டு நாள் இல்லை. மொத்தமாக 75 நாள். 'தமிழ்நாடு' என்று பெயரை வைத்தே ஆக வேண்டும் என்று சொல்லி 75 நாள் உண்ணாவிரதம் இருந்து உயிர்விட்ட ஒரே போராளி இவர்தான். இத்தனைக்கும் இவர் எந்த அரசியல் கட்சியையும் சாராதவர்.
உண்ணாவிரதம் வேண்டாமே..
இவர் உண்ணாவிரதம் இருந்த ஒவ்வொரு நாளும் செய்திகள் தீப்பொறியாக நாடு முழுவதும் பரவி விழுந்தன. ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சிக்கு பகீர் பகீர்தான். யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் தன் வீட்டு வாசற்படியிலேயே உண்ணாவிரதம் உட்கார்ந்து கொண்டார் சங்கரலிங்கனார். நாள் ஆக ஆக ஒவ்வொரு தலைவராக ஓடி வருகிறார்கள், "இந்த உண்ணாவிரதம் வேண்டாமே... நிறுத்தி கொள்ளுங்களேன்" என்று ம.பொ.சிவஞானம்., காமராசர், கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவா என கோரிக்கை மேல் கோரிக்கை விடுத்தார்கள்.
இறந்தபின் மாற்றுவார்களா?
கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை சங்கரலிங்கனார். நாள் ஆக ஆக உடல்நிலை மோசமானது. பேரறிஞர் அண்ணா வந்து சந்தித்தார். சங்கரலிங்கனார் மனமுருக சொன்னார் "அண்ணா! நீங்களாவது என்னுடைய ‘தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை' நிறைவேற்ற சொல்லுங்களேன்... ஒருவேளை நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை நிறைவேற்றுவார்களா? " என்றார்.
சாகும்வரை உண்ணாவிரதம்
கடைசியில் 76-வது நாள் உண்ணாவிரதத்தில் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு சங்கரலிங்கத்தை தூக்கிக் கொண்டு ஓடினார்கள். ஆனால் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். இவ்வளவு கொள்கை பிடிப்பும், உறுதியும் கொண்டு உண்ணாவிரதத்தை சாகும்வரை கடைப்பிடித்த சங்கரலிங்கனாரின் வயதோ 78.
தரப்பட்ட அழுத்தங்கள்
சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதமும், கோரிக்கையும், மறைவும் தமிழக அரசியலை அதிர்ச்சிக்கும், சலசலப்புக்கும் உண்டாக்கியது. ‘தமிழ்நாடு' என்று பெயர் சூட்ட அழுத்தங்கள் தரப்பட்டன. நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு' கோரிக்கைக்காகத் தனி மசோதா கொண்டுவரப்பட்ட போதெல்லாம் அது ஒவ்வொரு முறையும் அது தள்ளுபடிதான் செய்யப்பட்டது. 1967 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற அண்ணா தலைமையிலான திமுக அரசு, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை ‘தமிழக அரசு' ஆக மாறியது.
தமிழ்நாடு உருவானது
அதன் தொடர்ச்சியாக 1968 ஜூலை 18-ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட் என்பதை ‘தமிழ்நாடு' என பெயர் மாற்றி தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. அதே ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் பெயர் மாற்ற சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
நினைத்து பார்ப்பார்களா?
இன்று 50 ஆண்டுகள் முழுமையாக முடிந்துவிட்டது. தமிழ்நாடு என்ற பெயரை நாள்தோறும் உச்சரிக்கும் எத்தனை பேர் சங்கரலிங்கனாரை நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை ( பல பேர் தமிழ்நாட்டையே நினைத்துப் பார்ப்பதில்லை என்பது வேறு!). ஆனால் தனிமனித ஒழுக்கமும் கொள்கைப் பிடிப்பும் உடையவர் யாராக இருந்தாலும் அவரது பெயர் காலத்துக்கும் நிலைக்கும் என்பதற்கு சங்கரலிங்கனார் ஒரு சிறந்த உதாரணம்!!