ஊழல் புகார்.. ராமமோகன் ராவ் பதவி நீக்கம்.. புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்!
தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை அப்பதவியிலிருந்து தமிழக அரசு இன்று நீக்கியுள்ளது. புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவரது மகன் இல்லம் மற்றும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.
தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக தலைமைச் செயலாளர் ஒருவரிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. எனவே அவரை அப்பதவியிலிருந்து நீக்க கோரிக்கைள் வலுத்தன.
இந்த நிலையில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை அப்பதவியிலிருந்து தமிழக அரசு இன்று நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நில நிர்வாகத்துறை ஆணையாளராக பதவியிலுள்ளார். இந்த பதவியையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.
ஆளுநர் உத்தரவுப்படி பொதுத்துறை முதன்மை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கிரிஜா வைத்தியநாதன் 1981ம் ஆண்டு பேட்ஜ் தமிழ்நாடு அணி ஐஏஎஸ் அதிகாரியாகும். ஐஏஎஸ் அதிகாரியாக 30 வருட காலம் பணியாற்றியவர். பல்வேறு துறைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். நல்வாழ்வுத்துறையில் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியவர் என்ற நற்பெயரை ஈட்டியவர்.
புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்! pic.twitter.com/h1gXf9Ccc3
— Oneindia Tamil (@thatsTamil) December 22, 2016
இதனிடையே கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தின் மூலம்,மத்திய அரசின் பொருளாதாரத்துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் தமிழக தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்ற யூகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் ரூபாய் மதிப்பிழப்பு திட்டத்தில் அக்கறையாக பணியாற்றுபவர் சக்திகாந்த தாஸ். எனவே மோடிக்கு நெருக்கமான அவரை தலைமைச் செயலாளராக நியமிக்க வாய்ப்புள்ளதாக யூகங்கள் உலா வந்தன. ஆனால் ரூபாய் விவகாரத்தில் அவர் பிஸியாக இருப்பதால் அவரை தமிழக தலைமைச் செயலாளராக கொண்டுவரும் முடிவை மத்திய அரசு கைவிட்டதாக கூறப்படுகிறது. கிரிஜா வைத்தியநாதன், தஞ்சாவூர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.