புதிய ஆளுநராவது ஜனநாயகத்தை காப்பார் என நம்புகிறோம்: கனிமொழி
சென்னை: இந்த ஆளுநராவது நியாயமாக, ஜனநாயகத்தை காப்பார் என நம்புகிறோம் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கனிமொழி, டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்திற்கு ஆளுநரை நியமிக்க திமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பெரும் தாமதத்திற்கு பிறகு ஆளுநரை நியமித்துள்ளனர் . இந்த ஆளுநராவது நியாயமாக, ஜனநாயகத்தை காப்பார் என நம்புகிறோம்.
சிக்கல் நிலவும் தமிழக அரசியல் சூழலுக்கு முழு நேர ஆளுநர் தேவை. மக்கள் தேவைகளை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினர் கூறும் நியாயங்களை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் கூறுகையில், இப்போதுதான் புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நடவடிக்கைகள் போகபோகத்தான் தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.