இனிதாக முடிந்த தீபாவளி... மழையால் விபத்துக்கள் குறைவு
சென்னை: நேற்று தமிழகம் முழுவதும் தீபாவளிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மழை காரணமாக பட்டாசுகளால் உண்டாகும் பெரிய அளவில் விபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக தீபாவளிக் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகள் களை இழந்துக் காணப்பட்டன. சாலைகளில் மழை நீர் வெள்ளெமென ஓடியதால் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம் திடீரென மழை அளவு குறைந்தது. இதனால் மக்கள் ஆர்வமாக கடைவீதிகளுக்குச் சென்று வந்தனர். பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தீபாவளிப் பண்டிகையான நேற்று சென்னை உள்ளிட்ட இடங்களில் லேசான தூறலுடன் வெயிலும் அடித்ததால், பட்டாசுகள் வெடித்து புத்தாடைகள் அணிந்து மக்கள் சிறப்பாக தீபாவளியைக் கொண்டாடினர்.
தீபாவளியை முன்னிட்டு பல ஆலயங்களில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு மக்கள் வழிபாடு செய்தனர்.
ஆனால், தென் மாவட்டங்களின் சில இடங்களில் நேற்றும் மழை பெய்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஆனபோதும், புத்தாடைகள் அணிந்து இனிப்புகள் உண்டும் அவர்கள் தீபாவளியைக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, தீபாவளியை ஒட்டி விடுமுறையில் செல்லாமல் தீயணைப்புத் துறையினர் அனைவரும் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தயார் நிலையில் அவசர கால ஆம்புலன்ஸுகளும் ஆங்காங்கே நிறுத்தப் பட்டிருந்தன. ஆனபோதும் மழை காரணமாக பட்டாசுகளால் பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை என தீயணைப்புத் துறை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.