பொங்கி எழுந்த தமிழக போலீசார்.. பின்னணிக்கு காரணம் இந்த கோரிக்கைகள்தான்
சென்னை: தமிழக போலீசாருக்கு நிலுவையிலுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொடுக்க வலியுறுத்தி அவர்களின் குடும்பத்தார் இன்று சட்டசபையை முற்றுகையிட்டனர்.
போராட்டக்காரர்களை போலீசார் பிடித்து, திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர். போலீசாரின் குடும்பத்தார் போராட்டத்தில் குதிக்க இருந்த தகவல் போஸ்டர்கள் மூலமும், சமூக வலைத்தளங்கள் மூலமும் முன்கூட்டியே தெரியவந்ததால், சட்டசபை வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
போலீசாரின் முக்கிய கோரிக்கைகள் இவைதான்:
*8 மணி நேர வேலைக்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். தினமும் இதைவிட கூடுதலாக பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும். காவலர்களின் மனம், உடல் ஆரோக்கியத்திற்கு இது அவசியம்.
*மற்ற அரசு பணியாளர்களுக்கு நிகரான ஊதியத்தை வழங்க வேண்டும். பிற மாநிலங்களை ஒப்பிட்டால் தமிழக போலீசாருக்கு ஊதியம் குறைவு.
* காவல்துறையிலுள்ள, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதனால், பணிச்சுமை குறையும்.
*உயர் அதிகாரிகளுக்கு சேவகம் செய்யும் ஆர்டர்லி முறையை ரத்து செய்து, சுய மரியாதையோடு போலீசாரை வாழ விட வேண்டும்.
*வார விடுப்பு எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பிற அரசு ஊழியர்களுக்கெல்லாம் விடுப்பு எடுப்பது சாதாரண விஷயம்.
* காவலர்கள் கோரிக்கைகளை வெளிப்படுத்துவதற்கு வசதியாக போலீஸ் நலச் சங்கம் அமைக்க அனுமதி கொடுக்க வேண்டும். ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் வைத்துள்ளனர்.
* இரவு நேர பணி திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பகலில் வேலை பார்ப்பவரையே இரவும் வேலை பார்க்க வைப்பது கூடாது. இதில் சுழற்சி முறைதேவை. இவையெல்லாம் போலீசாரின் முக்கிய கோரிக்கைகளாகும்.