கப்பலில் வெளி நாடுகளுக்கு ரேஷன் அரிசி கடத்தலா?: அதிகாரிகள் விளக்கம்
துாத்துக்குடி: துாத்துக்குடி துறைமுகத்தில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., சாமிநாதன் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், ‘ரேஷன் அரிசி கடத்தப்படவில்லை' எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
துாத்துக்குடி துறைமுகத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு கப்பலில் அரிசி கடத்தல் நடை பெறுகிறதா என சாமிநாதன் எஸ்.பி., தலைமையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் துறைமுகம் பகுதியில் ஆய்வுகளை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து துறைமுகத்தின் தலைவர் ஆனந்த சந்திரபோஸ், மற்றும் அதிகாரிகளிடம் போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் குறித்து விபரங்களை அவர்கள் பெற்றனர்.
ஆய்வின் முடிவில் சாமிநாதன் எஸ்.பி., கூறியதாவது :-
கடந்த ஆண்டு மட்டும் தென் மாவட்டங்களில் ரேஷன் அரிசி கடத்திய 56 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கப்பல் வழியாக வெளி நாடுகளுக்கு கடத்தல் செய்யப்படுகிறதா, என்பதை ஆய்வு செய்துள்ளோம். துறைமுகத்தலைவர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.தொடர்ந்து கண்காணிப்பு பணியில் உள்ளதால், ரேஷன் அரிசி கடத்தல் குறைந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.