தொடர் கைதுகளில் அதிரடி காட்டும் தமிழக போலீஸ்.. ஒரு வழக்கில் மட்டும் முடியவில்லையே!
Recommended Video
சென்னை: பல்வேறு வழக்குகளில் கைது நடவடிக்கைகளில் துரிதமாக செயல்பட ஆரம்பித்துள்ள காவல்துறையின் கடைசி இலக்கு சின்னத்திரை நடிகை நிலானி.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் இறுதி கட்டத்தை எட்டியது முதல் தமிழக காவல்துறை, போராட்டக்காரர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முதல்கட்டமாக தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியது காவல்துறை. 2 நாட்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டது அப்பாவிகள் என்பதை அறிந்துதான் அரசே அவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு கொடுத்துள்ளது. இதுகுறித்து நீதி விசாரணை நடந்து வருகிறது. இதுவரை காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
போராட்டங்கள்
இந்த நிலையில், அரசு நிலைப்பாட்டுக்கு எதிராக போராட்டம் நடத்துவோர், போராட்டம் நடத்த கூடும் என எதிர்பார்க்கப்படுவோரையெல்லாம் கைது செய்ய ஆரம்பித்துள்ளது காவல்துறை. அதிலும் சேலம்-சென்னை நடுவே புதிதாக அமைக்கபட உள்ள நெடுஞ்சாலை திட்டத்தை உடனே அமைக்க வேண்டும் என்பதில் அரசு அவசரமாக உள்ளது. மக்களின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடக்கின்றன.
மன்சூர் அலிகான் முதல் வளர்மதி வரை
இந்த சாலை திட்டத்தால் விவசாய நிலம் பறிபோகிறது, வீடுகள் பறிபோகிறது என கூறி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு ஆதரவு அளித்ததற்காக, நடிகர், மன்சூர் அலிகான், இயற்கை ஆர்வலர் பியூஸ் மானுஷ், மாணவி வளர்மதி ஆகியோரை அடுத்தடுத்து போலீசார் கைது செய்துள்ளனர். இதுதவிர எதிர்ப்பு தெரிவித்த மூதாட்டி உட்பட பல பொதுமக்களை கைது செய்தபடி உள்ளனர்.
நடிகை கைது
இந்த நிலையில்தான், தூத்துக்குடியில் போலீசாரால் துப்பாக்கிச் சூடுக்கு உள்ளாகி 13 பேர் கொல்லப்பட்டதை பார்த்து கோபத்தில் சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவு செய்த நடிகை நிலானி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை சீருடையுடன் அவர் போலீசாரை விமர்சனம் செய்து பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
எஸ்.வி.சேகர் திறமை
பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குறித்து பேஸ்புக்கில் அவதூறாக வீடியோ வெளியிட்ட சூர்யாதேவி என்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயங்களில் காவல்துறை அடுத்தடுத்து துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டே கைவிட்ட பிறகும் கூட, எஸ்.வி.சேகரை மட்டும் கடைசிவரை காவல்துறை கைது செய்யவில்லை. ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையாக கூறப்படும் தமிழக போலீசாருக்கு இத்தனை நாட்களாக டிமிக்கி கொடுத்து ஏமாற்றிய எஸ்.வி.சேகர் இன்றுதான் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றுள்ளார். இத்தனைக்கும் தமிழிசைக்கு இழைக்கப்பட்டதை போலவே பெண்களுக்கு எதிரான குற்றத்தை இழைத்த குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளவர்தான் எஸ்.வி.சேகர். பெண் பத்திரிகையாளர்களை படு மோசமாக விமர்சித்து வந்த பேஸ்புக்பதிவை ஷேர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.