ஆங்கிலேயர் காலம் முதல் 'அரசுகளை' அலறவிடும் சென்னை மெரினா கடற்கரை
ஆங்கிலேயர் காலம் முதல் 'அரசுகளை' அலறவிடுகிறது சென்னை மெரினா கடற்கரை.
Recommended Video
சென்னை: ஆங்கிலேயர் காலம் முதல் தற்போது வரை சென்னை மெரினா கடற்கரை அரசுகளை அலறவிடுகிற போர்க்களமாகத்தான் இருந்து வருகிறது.
ஆங்கிலேயர் காலத்தில் தேச விடுதலைக்காக ஏராளமான பொதுக்கூட்டங்கள் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றிருக்கின்றன. மகாத்மா காந்தி அடிகள், பாலகங்காதர திலகர் போன்ற பெருந்தலைவர்கள் பல மணிநேரம் உரையாற்றிய இடம்.
இதனாலேயே மெரினாவின் ஒரு பகுதிக்கு திலகர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. 1930களின் இறுதியில் முதலாவது இந்தி திணிப்பு எதிர்ப்பு போர் நடைபெற்றது.
தந்தை பெரியாரின் தலைமையிலான இந்த போர் வரலாற்றின் துயரமான பக்கங்களைக் கொண்டது. திருச்சியில் இருந்து இந்தி திணிப்பு எதிர்ப்பு பெரும்படை மணவை ரெ. திருமலைச்சாமி தலைமையில் நடைபயணமாக சென்னை நோக்கி வந்தது.
இந்த நெடும்பயணத்தில் பங்கேற்ற பலரும் வரும் வழியில் நோய் தாக்கியும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியும் மாண்டு போனது வரலாறு. இந்த பெரும்படையின் பயணம் நிறைவடைந்த இடம் சென்னை மெரினா கடற்கரை. இப்பயணத்தின் முடிவில்தான் தந்தை பெரியார் தமிழ்நாடு தமிழருக்கே என்கிற முழக்கத்தை 1938-ம் ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் வெளியிட்டார்.
நாடு விடுதலை அடைந்த பின்னரும் எத்தனையோ அரசியல் பொதுக்கூட்டங்கள் மெரினா கடற்கரையில் நடைபெற்றிருக்கின்றன. அவசர நிலை பிரகடனத்துக்காக இந்திரா காந்தி மன்னிப்பு கேட்ட இடமும் சென்னை மெரினாதான்.
அரசியல் கட்சிகள் தங்களது பலத்தை நிரூபிக்க மாநாடுகள் நடத்தியதும் மெரினாவில்தான். இப்போதுதான் பொதுக்கூட்டங்களுக்கு கெடுபிடி... மெரினாவில் விடிய விடிய உரை முழக்கங்கள் கேட்ட காலம் உண்டு. வைகறையில் பேசுகிறேன் என மெரினாவில் வைகோ கர்ஜித்த காலமும் உண்டு.
இவ்வளவையும் தாண்டி ஜல்லிக்கட்டு புரட்சிக்காக ஒரு வார காலம் மெரினாவிலேயே அலை அலையாக லட்சக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு இரவும் பகலும் புரட்சி செய்து உரிமையை மீட்ட இடம், வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்ற இடம் இந்த மெரினாதான். மக்கள் திரண்டால் எதையும் சாதிக்க முடியும் என அரசுகளுக்கு பாடம் கற்பித்த தமிழகத்தின் தியான்மென் சதுக்கம் மெரினா என்பது மிகையல்ல.
இதனால்தான் ஓராண்டு காலமான மெரினாவில் போராட்டம் நடத்தவே விடாமல் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது அரசுகள். 4 பேர் கறுப்பு சட்டையுடன் மெரினாவில் கால்வைத்தாலே டெல்லி நடுநடுங்குகிறது. ஓராண்டு காலம் பொறுத்த தமிழர்கள் இப்போது நீதிமன்றத்தின் கதவைத் தட்டி போராடும் உரிமைக்கான முதல் வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொல்வதைப் போல, மெரினாவை திறந்துவிடுங்கள்.. இழந்த உரிமைகளை மீட்போம் என்பது வசனம் அல்ல.. சில வாரங்களுக்கு முன்னர் அண்ணாசாலையில் அத்தனை ஆயிரம் பேர் திரண்டார்களே..அதைவிட பெருங்கூட்டம் மெரினாவில் திரளும்..அந்த அளவுக்கு தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது. உரிமைகள் வேட்டையாடப்பட்டுள்ளன. மெரினா திறக்கப்படும் நாளும் தமிழர் உரிமைகள் மீட்டெடுக்கப்படும் நாளும் வெகுதொலைவில் இல்லை என்பதையே சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளிப்படுத்துகிறது.