துவரம் பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகள்
சென்னை: துவரம் பருப்பு விலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை தமிழக அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.
இன்று மதியம் நிலவரப்படி, துவரம் பருப்பு விலை ரூ.200 என்ற அளவிலுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் துவரம் பருப்பு ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த அளவுக்கு பருப்பு விலை ஏறுவதற்கு, மழை பொய்த்ததால் ஏற்பட்ட உற்பத்தி குறைவே காரணம்.
பருப்பு விவசாயம் எத்தனை ஹெக்டேரில் நடக்கிறது, எங்கெல்லாம் மழை பொய்த்துள்ளது என்பதை அந்தந்த மாநில வருவாய்த்துறை கணக்கெடுத்திருக்கும். அதை மத்திய அரசு பெற்று, முன்கூட்டியே விலையேற்றத்தை கணித்து இறக்குமதியை அதிகரித்திருக்கலாம்.
இதை மத்திய அரசு செய்ய தவறிவிட்டது. விலையேற்றத்தை பயன்படுத்தி பதுக்கல்காரர்கள் கைவரிசை காட்ட தொடங்கியுள்ளனர். பதுக்கல்காரர்களை இரும்புக்கரம் கொண்டு ஒதுக்க மாநில அரசுகள் தவறி வருகின்றன. இப்படி பருப்பு விலை பெரும் பாரமாக மக்கள் தலைமீது விடிந்துள்ளது.
பருப்பு விலை பற்றி பல தலைவர்களும் தங்கள் கருத்துகளை கூறிவருகின்றனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது இல்லத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், வரலாறு காணாத அளவுக்கு பருப்பு விலை உயர்ந்து கொண்டே போகிறதே? என்று நிருபர்கள் கேட்டனர். பதிலளித்த கருணாநிதி "இது பற்றி உங்கள் கருத்துத்தான் என்னுடைய கருத்தும்" என்றார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் துவரம் பருப்பு, உளுத்தப்பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் விலை உயர்வால் கடந்த சில வாரங்களாக மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். அன்றாட பயன்பாட்டுக்குரிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடின்றியும், நியாயமான விலையிலும் கிடைக்கச் செய்வது அரசின் கடமையாகும்.
மாநில அரசுக்கு மட்டுமின்றி மையஅரசுக்கும் இதிலே பெரும் பொறுப்புண்டு. ஆனால், அவ்வாறு பொறுப்பையுணர்ந்து மைய, மாநில அரசுகள் செயற்படுவதாகத் தெரியவில்லை. விலைவாசிக் கட்டுப்படுத்துவது முக்கியக் கடமை எனச் சொல்லி ஆட்சிக்கு வந்த பா.ஜ.க அரசு அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
மக்களுக்கானத் தேவை அதிகரிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து அதற்கேற்ப போதிய இறக்குமதி நடவடிக்கைகளை எடுக்கவில்லை. விலைவாசி ஒருப்பக்கம் உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில் மறுபுறம் விவசாயிகளின் வாழ்வுநிலை சீரழிந்து வருகிறது.
பதுக்கல், கள்ளச்சந்தை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும், விவசாய விலைபொருட்களுக்கு நியாயமான விலைகிடைக்கவும் உரிய முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். மாநிலத்திலும் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் அத்தியாவசிய பொருட்கள் முறையாக விநியோகிக்கப்படவில்லை. அவற்றை நம்பியிருக்கும் ஏழை, எளிய நடுத்தர மக்கள் விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மைய, மாநில அரசுகள் மிகவும் மெத்தனமாக செயல்பட்டதன் விளைவே, தற்போதைய விலைவாசி உயர்வுக்குக் காரணமாகும். ஆயுதபூஜை, தீபாவளி, கிறிஸ்மஸ்து, பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகைகள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. தற்போது விலைகள் மென்மேலும் உயரும் என்கிற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
விலைவாசி உயர்வுக்கு, போதிய உற்பத்தி மற்றும் இறக்குமதி இல்லையென்பதை காரணமாகவுள்ளன. அத்துடன், இணையதளத்தின் வழியாக நடக்கும் வணிகமுறையும் விலைஉயர்வுக்குக் காரணம் என தெரியவருகிறது. இணையவழி வணிகம் செய்யவும் நிறுவனங்கள், திட்டமிட்டே பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இதனைக் கண்காணித்து, பதுக்குவோரின் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய நெருக்கடிகளிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றிட இணையவழி வணிகத்தைக் கட்டுப்படுத்துவது உடனடித் தேவையாகும். மைய, மாநில அரசுகள் பண்டிகைக் காலத்தில் விலைவாசியைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 15 முதல் 20 நாட்களுக்குள் அத்தியாவசிய உணவு பொருட்களான பருப்பு, எண்ணெய் போன்றவற்றின் விலைகள் 30 முதல் 40 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
மத்திய அரசு வேளாண் உற்பத்திக்கு முன்னுரிமை கொடுத்து, உணவுப் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றும், உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றும், உணவுப் பொருட்களை பதுக்காமல் வெளிப்படையாக விற்பனை செய்திட மத்திய, மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வாசன் தெரிவித்துள்ளார்.