புத்தாண்டில் புதுவாழ்வு மலரட்டும்... அரசியல் தலைவர்கள் வாழ்த்துச்செய்தி
சென்னை: தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்கள் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தும் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார். அவர் விடுத்த வாழ்த்துச்செய்தியில், தமிழக மக்களுக்கு அமைதி, ஆரோக்கியம், முன்னேற்றம், ஏற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்;
வசந்தம் மலரட்டும்
வழி மறிக்கும் தடைகளை தகர்த்து,வெற்றிகளை பெற்று புதிய சாதனைகளை படைத்து வளமான தமிழகத்தை படைக்க புத்தாண்டில் உறுதியேற்போம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரது வாழ்விலும் வசந்தம் மலரட்டும், வளம் பெருக்கட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதுவாழ்வு மலரட்டும்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், பிறக்கும் புத்தாண்டு புதிய ஒளியைக் கூட்டட்டும், புதிய சிந்தனையை தரட்டும் எனக் கூறியுள்ளார். மேலும், 2020-ம் ஆண்டு அனைவருக்கும் நன்மை செய்விக்கும் ஆண்டாக அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார் அவர்.
துயர் நீங்கட்டும்
துண்பத்தில் உழல்கின்ற விவசாய பெருமக்களுக்கு வருகின்ற காலம் துயர் துடைக்கின்ற காலமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், அந்த நம்பிக்கையுடன் வாழ்த்தை தெரிவித்துக் கொள்வதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மனிதநேயம்
வரும் 2020-ம் ஆண்டு சாதி, மதம், இனம், வேறுபாடின்றி சமதர்ம சமுதாயம் அமைந்திடவும், மனிதநேயம் மலர்ந்திடவும் வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.
மகிழ்ச்சி
வரும் புத்தாண்டு அனைவருக்கும் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும் ஆண்டாக அமையட்டும் என்றும், வேளாண்மை தொழில்கள் செழிக்க வெண்டும் எனவும் வாழ்த்துக் கூறியுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.