மக்கள் நல கூட்டணியை உடைக்க கங்கணம் கட்டும் கட்சிகள்.. தினம் ஒரு வதந்தி கிளப்பி ஆனந்தம்
சென்னை: மக்கள் நல கூட்டணியில் தேமுதிக இணைந்தாலும், இணைந்தது, முக்கிய சில கட்சிகளின் பிரமுகர்களுக்கு, வாயிலும், வயிற்றிலும் பொறாமை புகை கிளம்பிக்கொண்டுள்ளதாம். எப்படியும் கூட்டணியை உடைத்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மும்முர வேலைகளில் ஈடுபட்டுள்ளனராம்.
கிணற்றில் போட்ட கல் போல, அசையாமல் கிடந்த தேமுதிக நிலைப்பாடு, திடீரென ஊதி வைத்த பலூன்போல உயர எழும்பி பறக்க தொடங்கியது. அதிலும், மாற்று அரசியல் கோஷத்தை முன் வைத்த மக்கள் நல கூட்டணியுடன் தேமுதிக கூட்டணி வைத்துக்கொண்டது.
விஜயகாந்த், திமுகவோடுதான் கூட்டணி வைப்பார் என எதிர்பார்த்திருந்த திமுக பிரமுகர்களுக்கும், தங்கள் கூட்டணியிலேயே தொடருவார் என்று நினைத்த பாஜகவினருக்கும் இதனால் கடும் அதிர்ச்சி.
வைகோ மீது கடும் கோபம்
தங்கள் கோபத்தையெல்லாம், விஜயகாந்த் மீது கொட்ட முடியாது என்பதால், வைகோ மீது சேற்றை வாரி இறைக்க தொடங்கியுள்ளனர். தேமுதிகவால் வட மாவட்டங்களில் தங்களுக்கு எதிராக நான்கு முனை போட்டி ஏற்பட்டு, வாக்கு சிதறும் என்ற அச்சத்தால் பாமகவும் பதற்றத்தில் உள்ளது.
ரூ.500 கோடி
விஜயகாந்த்தை ரூ.500 கோடி கொடுத்து இழுக்க திமுக முற்பட்டது என வைகோ கூறியதை பிடித்து வைத்துக்கொண்டு எப்படியும் பிளவை ஏற்படுத்த வேண்டும் என்பது பாமக, பாஜக ஆசையாக உள்ளது.
பாமக மனு
விஜயகாந்த் பணத்துக்கு ஆசைப்படாதவர் என்ற இமேஜை உருவாக்க முயன்ற வைகோவின் இமேஜை டேமேஜ் செய்துவிட்டனர் பாமகவும், பாஜகவினரும். தேர்தல் ஆணையத்தில் இந்த விவகாரத்தை விசாரிக்க மனுவே அளித்துவிட்டது பாமக.
டிவியை பிடித்துக்கொண்டனர்
திமுகவும், சட்டரீதியான மிரட்டலை வைகோவுக்குவிடுத்துள்ளது. அப்படியும் வைகோ அசைவதாக இல்லை. எனவே பாலிமர் டிவியில் இருந்து எழுந்து சென்றதை பிடித்துக்கொண்டு வைகோவையே டார்கெட் செய்ய ஆரம்பித்தது திமுக.
வைகோ மீம்ஸ்கள்
சமூக வலைத்தளங்களில் பாலிமர் சம்பவத்தை குறிப்பிட்டு மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டன. ரூ.500 கோடி குற்றச்சாட்டு, சாதிக் பாட்ஷா சாவு குற்றச்சாட்டுகளை மறைக்கும் வகையில் வைகோவுக்கு எதிரான பிரச்சாரம் தூள் பறக்கிறது. ஆனால், வைகோவோ, அதற்கும் அசையவில்லை.
விஜயகாந்த்தை சீண்ட
இதனால் ம.ந.கூவிலிருந்து விஜயகாந்த்தை வெளியேற்றும் வகையில் அவரை தூண்டும் வேலைகளில் பிற அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகிறார்கள். விஜயகாந்த் பேரம் பேசியதாக வைகோவே ஒப்புக்கொண்டார். வைகோ, விஜயகாந்த்தை அவமானப்படுத்திவிட்டார் என்று திரி கொளுத்தி போடுகிறது பாஜக.
காலி பண்ணிட்டாங்க
மேட்டூர் தொகுதி தேமுதிக எம்.எல்.ஏவாக இருப்பவர் எஸ்.ஆர்.பார்த்தீபன். இவர் திமுகவில் இணைந்துவிட்டதாக திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தீயாக செய்தி பரப்பினர். பத்திரிகையாளர்களும், இது உண்மையாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டனர்.
அதெல்லாம் புரளி
பார்த்தீபனிடமே தொலைபேசியில் தொடர்புகொண்டு பத்திரிகையாளர்கள் பேசிய பிறகுதான் தெரிந்தது, அது வதந்தி என்பது. தேமுதிக சார்பில், மீண்டும் மேட்டூர் தொகுதியில் தான், போட்டியிட போவதாக பார்த்தீபன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
குழப்பம் ஏற்படுத்த
ம.ந.கூட்டணியில் விஜயகாந்த் இணைந்ததால் அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே இதுபோன்ற வதந்திகளின் நோக்கமாக உள்ளது.
அடுத்த திரி கொளுத்தல்
இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள் மத்தியில் வாட்ஸ்அப்பில் ஒரு தகவல் தீயாய் பரவியது. மதுரையில் தேமுதிகவின் பிரேமலதா பேசுகையில், திருமாவளவன் இல்லாவிட்டாலும், கேப்டன் அணி வெல்லும் என்று பேசியதாக அந்த தகவல் கூறியது.
அதுவும் வதந்தி
பிரேமலதா மிகவும் யோசித்து பேசக்கூடியவர். ம.ந.கூட்டணியில் அதிக வாக்கு வங்கி வைத்துள்ள கட்சி விடுதலை சிறுத்தைகள்தான். அப்படி இருக்கும்போது பிரேமலதா எப்படி இவ்வாறு பேசியிருக்க கூடும் என்ற ஐயப்பாடு பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டது. மேலதிக தகவல்களை திரட்டியபோதுதான், இதுவும் வதந்தி என்று தெரியவந்தது.
தொடரும் நெருக்கடி
விஜயகாந்த், மக்கள் நல கூட்டணியில் இணைந்தது முதல் தினமும் ஏதாவது ஒரு வகையில் அந்த கூட்டணிக்கு நெருக்கடிதர, திமுக, பாமக, பாஜக சில நேரங்களில் அதிமுகவும் முயன்றுவருகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.