தமிழக சிறைகளில் தண்டனைக் கைதிகள் விடுப்பில் செல்ல அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார்
தமிழக சிறைகளில் தண்டனைக் கைதிகள் விடுப்பில் செல்ல அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை: தண்டனைக் கைதிகள் சிறையிலிருந்து விடுப்பில் செல்வதற்கு சிறை அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன.
லஞ்சம் நாட்டில் மட்டுமல்ல சிறையிலும் தலைவிரித்தாடுகிறது என்பது புகார்களின் மூலம் வெளிச்சமாகியிருக்கிறது.
தமிழ்நாடு அரசு சிறை விதிகளின்படி, தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி, தனது தண்டனைக் காலத்தில் மூன்று ஆண்டு நல்ல படியாக நிறைவு செய்தால் அவர்கள் ஆண்டுக்கு 15 நாட்கள் அவர்களுடைய வீட்டுக்கு விடுப்பில் சென்றுவர அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த சிறை விடுமுறை முதல் கட்டமாக 6 நாட்களாகவும், அடுத்து 3 நாட்கள் வீதம் என 3 கட்டங்களாக சிறைக் கைதிகளுக்கு சிறை விடுப்பு அளிக்கப்படுகிறது.
அது மட்டுமில்லாமல் 1982 ஆம் ஆண்டு சட்டப்படி 30 நாட்களும் தண்டனைக் கைதிகளுக்கு சிறை விடுமுறை அளிக்கலாம்.
இப்படி தண்டனைக் கைதிகளுக்கு சட்டப்படி சிறைவிடுப்பு அளிப்பதற்குத்தான் சிறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு விடுப்பு அளித்துவருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுதுள்ளது.
இது குறித்து ஒரு ஆங்கில செய்தித்தாளுக்கு, சிறையிலிருந்து விடுப்பில் வந்த கைதியின் உறவினர்கள் தெரிவிக்கையில், ஒரு கைதி மூன்று நாள் விடுப்புக்கு ரூ.5000 முதல் ரூ.15,000 வரையிலும், 6 நாள் விடுமுறைக்கு ரூ.8,000 முதல் ரூ.18,000 வரை லஞ்சமாக கொடுத்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
புழல் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ஒரு கைதியின் குடும்பத்தினர் கூறுகையில், சட்டப்படி கொடுக்க வேண்டிய சிறை விடுமுறைக்கு பணம் செலுத்தி பெற வேண்டியதாக இருக்கிறது. அதற்காக அவர்கள் ஆயிரக் கணக்கில் பணம் செலுத்த வேண்டியிருக்கிறது. பலரும் பணம் கொடுக்காமல் கைதிகளை விடுப்பில் அனுப்ப தயாராக இல்லை. சில அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் சிறை கைதிகளுக்கு விடுப்பு அளித்து அனுப்புகின்றனர். இது அவர்களுக்கு சிறை வாழ்க்கையின் அழுத்தத்திலிருந்து ஒரு தற்காலிக விடுபடுதலுக்கு உதவுகிறது." என்று தெரிவித்துள்ளனர்.
சிறைக் கைதிகள் விடுப்பில் செல்ல லஞ்சம் வாங்கப்படுவது குறித்து சிறைத்துறை கூடுதல் டிஜிபி அஷுதோஷ் சுக்லா கூறுகையில், "இது தொடர்பாக புகார்கள் வந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்று கூறினார்.
புழல் சிறை எஸ்பி ருக்மணி பிரியதர்ஷினி கூறுகயில், "இதுவரை எங்களுக்கு எழுத்துப்பூர்வமான புகார்கள் எதுவும் வரவில்லை" என்று கூறியுள்ளார்.