நெல்லை பாபநாசத்தில் பட்டையை கிளப்பிய மழை... எங்கெங்கு எவ்வளவு மழை தெரியுமா?
தமிழகத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 14 செமீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 14 செமீ மழை பெய்துள்ளதாக வானிலை மைய தகவல் தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேலும், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் கடலோர மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இன்று காலையில் வெயிலடித்தாலும் திடீர் என மழை பெய்தது.
டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. லட்சக்கணக்கான ஏக்கர் வயல்வெளிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பயிர்கள் மூழ்கியுள்ளன.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
தென் மாவட்டங்களிலும் மழை நீடிப்பதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வானிலை மையம் சொல்வதென்ன
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய அதிகாரி, தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது மன்னார் வளைகுடாவிலிருந்து வட தமிழகத்தின் கடலோரா மாவட்டங்கள் வரை பரவியிருக்கிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் மேகமூட்டம்
தற்போது நிலை கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தென் மாவட்டம், மற்றும் கடலோர டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை இருக்கும் என்று கூறியுள்ளார்.
மழை அளவு எவ்வளவு
கடந்த 24 மணிநேரத்தில் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் அதிகபட்சமாக 14 செமீ மழை பதிவாகியுள்ளது. மணிமுத்தாறு, நாகப்பட்டினத்தில் 12 செமீ மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் நகரில் 11 செமீ மழையும், திருத்துறைப்பூண்டு, நாங்குனேரி, கடலூரில் 9 செமீ மழையும் பதிவாகியுள்ளது. பரங்கிப்பேட்டை, அம்பாசமுத்திரம், திருவாரூரில் 7 செமீ மழை பெய்துள்ளது.
சென்னையில் மழை குறைந்தது
கடந்த திங்கட்கிழமையும், வியாழக்கிழமையும் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. 30 செமீ அளவிற்கு மழை பதிவானது. இதனால் புறநகர் பகுதிகள் 6 நாட்களாக மிதக்கின்றன. இந்த நிலையில் சென்னையில் லேசான அளவிற்கே மழை பெய்துள்ளது. 1 செமீ மழையே பதிவாகியுளள்து.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்னும் மூன்று நாட்களில் மழை படிப்படியாக குறையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலோரங்களில் மீன்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.