தமிழக பாஜகவுக்கு இன்று புதிய தலைவர் அறிவிப்பு? யாருக்கு அதிக வாய்ப்பு!
சென்னை: பாஜகவின் தேசிய தலைவர் தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள காரணத்தால் தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் யார் என்பது இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதனால் பாஜக முக்கிய தலைவர்கள் தங்கள் பெயர் தலைவர் பதவிக்கு அறிவிக்கப்படுமா என்று மிகுந்த ஆர்வமுடன் உள்ளார்கள்.
பாஜகவின் தமிழக தலைவராக இருந்தவர் தமிழிசை சவுந்திரராஜன். இவர் 2014ம் ஆண்டு முதல் பாஜக மாநில தலைவராக இருந்து வந்தார். கடந்த செப்டம்பர் 1ம் தேதி தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டார். அப்போது முதல் தமிழகத்தில் பாஜகவுக்கு புதிய தலைவர் யாரும் நியமிக்கப்படவில்லை.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.. வீறுகொண்டு வரும் காளைகள்!
மாவட்ட தலைவர்கள்
இந்நிலையில் உள்கட்சி தேர்தலை நடத்த பாஜக தேசிய தலைமை உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் நடத்தப்பட்டு மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது மாநில தலைவரை தேர்வு செய்ய வேண்டும்.
19ம் தேதி தேர்தல்
கடந்த 5ம்தேதி புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. இதனிடையே நாளை மறுநாள் அதாவது 19ம் தேதி தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே காலியாக உள்ள மாநில தலைவர் பதவியை நிரப்புவதற்கான பணியில் கட்சியின் தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
தமிழக தலைவர்
அந்த வகையில் மிசோரம்,புதுச்சேரி, மேற்கு வங்கத்திற்கு பாஜக மாநில தலைவர்கள் கடந்த இரண்டு நாட்களாக அடுத்தடுத்த நாளில் நியமிக்கப்பட்டனர். தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு மட்டும் இதுவரை தலைவர் அறிவிக்கப்படவில்லை. தமிழக பாஜகவுக்கு இன்று தலைவர் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னார்
இதில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் சிபி ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், நயினார் நகேந்திரன் ஆகிய இவர்களில் யாராவது ஒருவர் தலைவராக அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் இவர்கள் இல்லாமல் புதியவரையும் அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே பாஜக முக்கிய தலைவர்கள் யார் தலைவராக அறிவிக்கப்படுவார் என்று மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.