அனிதா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்... மதுரை, திருவள்ளூர், குமரியில் எழுச்சிப் போராட்டம்
மாணவி அனிதா தற்கொலை விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தில் சென்னை தொடங்கி குமரி வரை போராட்டம், மறியல் அரங்கேறி வருகிறது.
சென்னை : தமிழகத்தின் தொடக்க எல்லையான திருவள்ளூரில் தொடங்கி குமரி வரை அனிதாவின் மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளை குற்றஞ்சாட்டி பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நீட் தேர்வால் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவி அணிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். நீட் தேர்வை எதிர்த்து மாணவி அனிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அரியலூர், செந்துறை அருகே குழுமூரில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவரது தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகளை கண்டித்து,மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கட்டபொம்மன் சிலை முன்பாக மக்கள் அதிகாரம் இயக்கம் சார்பில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அப்போது அவர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஒரு மணி நேர போராட்டம்
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடை பெற்ற இந்த போராட்டம் போக்குவரத்துக்கு நெரிசலை ஏற்படுத்தியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிசென்று காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
கைது செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் தனியார் திருமணம் மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.இதனால் அப்பகுதியில் 1மணி நேரமாக போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டு,பரபரப்பு நிலவியது.
திருவள்ளூரில்
இதே போன்று திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பில் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரியில்
கன்னியாகுமரி மாவட்டத்திலும் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு போராட்டம் நடத்திய 50 க்கு மேற்பட்ட மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.