பல் இளிக்கும் 'டிஜிட்டல் இந்தியா' முழக்கம்.. அம்பலப்படுத்திய 'நீட்'!
கார்பொரேட் கம்பெனிகளும், மேல்தட்டு மக்களும் சொகுசு வாழ்க்கை வாழத்தான் டிஜிட்டல் பயன்படும், ஏழை, எளியவர்கள் இன்னும் பல ஆயிரம் கிலோமீட்டர் பயணித்துதான் ஒரு தேர்வை கூட எழுத வேண்டிய சூழல் இருக்கும் என்றால
Recommended Video
சென்னை: நீட் தேர்வு எழுத ராஜஸ்தானுக்கு தமிழகத்தின் தென்கோடியில் இருந்து மாணவ, மாணவிகளை அனுப்பி வைக்கும், நிலையில்தான் டிஜிட்டல் இந்தியா உள்ளதா என்ற கேள்வி சராசரி மக்களுக்கு எழுந்துள்ளது.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. அதாவது மத்திய கல்வி வாரியம் நடத்துகிறது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை மறுதினம், ஞாயிற்றுக்கிழமை, நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
விமானத்தில்தான்
10 மையங்கள் மட்டுமே தமிழகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதால்தான் இந்த கெடுபிடி. இந்த திடீர் அறிவிப்பால் ஏழை, எளிய மாணவ, மாணவிகள் பரிதவிக்கிறார்கள். உடனடியாக ராஜஸ்தான் செல்ல ரயிலில் டிக்கெட் கிடைக்காத சூழலில், விமானத்தில் பயணிக்க வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர்.
பாவம் தமிழக மாணவ, மாணவிகள்
தமிழகத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு விமானத்தில் பயணித்து, மொழி தெரியாத ஊரில், விடுதியை தேடி பிடித்து தங்கி, தேர்வு மையத்தை கண்டுபிடித்து தேர்வை எழுதி, மீண்டும் விமானத்தில் தமிழகம் திரும்புவதெல்லாம், சென்னையை கூட முன்பின் பார்த்திராத, சாமானிய பின்னணி கொண்ட மாணவ, மாணவிகளுக்கு எவ்வளவு பெரிய விஷயம்?
உள்நோக்கம் என்ன?
இவ்வளவு கஷ்டங்கள் இருந்தும், ஏன், ராஜஸ்தானுக்கு தமிழக மாணவ, மாணவிகள் தேர்வெழுத செல்ல வேண்டும்? இதன் உள்நோக்கம் கேள்விகளை எழுப்புகிறது. மருத்துவ துறையில் சாதனை படைத்து வரும் தமிழர்களை மட்டம் தட்டி, பிற மாநில மாணவ, மாணவிகளுக்கு அதிக இடங்கள் கிடைக்க செய்வதற்கான முயற்சியா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாமல் இல்லை.
நாடு எங்கேயோ போய்விட்டதே
சிக்கலான அறுவை சிகிச்சைகளையே சீனியர் டாக்டர்கள் வீடியோ கான்பரன்ஸ் உதவியோடு வெற்றிகரமாக செய்ய முடியும் இணையதள கால கட்டத்தில், டாக்டருக்கு படிக்கும் ஒரு நுழைவு தேர்வுக்காக பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் மாணவ, மாணவிகளை அலைக்கழிப்பதற்கு அவசியம் இல்லையே! இத்தனைக்கும், டிஜிட்டல் இந்தியாவாக மாற்றிவிட்டோம் என மார் தட்டும் மத்திய அரசு உள்ள நாட்டில் தேர்வெழுத ராஜஸ்தான் செல்ல தேவை என்ன வந்தது?
இது மட்டும் முடியாது
கரன்சியே கையில் இருக்க கூடாது என்றுதானே பண மதிப்பிழப்பு, அதனால்தானே பணம் செலுத்த டிஜிட்டல் வாலெட்டுகள் பெருக்கம், உட்கார்ந்த இடத்தில் இருந்தே பிரதமர் மோடியிடம் கூட டுவிட்டரில் கேள்வி கேட்க வைக்கும் உரிமை இதையெல்லாம் கொடுத்தது டிஜிட்டல். ஆனால், அத்தியாவசியமான ஒரு தேர்வை எழுத மட்டும் அவையெல்லாம் உதவாது என்றால், இந்த டிஜிட்டல் இந்தியா முழக்கத்தால் பலன் என்ன? கார்பொரேட் கம்பெனிகளும், மேல்தட்டு மக்களும் சொகுசு வாழ்க்கை வாழத்தான் டிஜிட்டல் பயன்படும், ஏழை, எளியவர்கள் இன்னும் பல ஆயிரம் கிலோமீட்டர் பயணித்துதான் ஒரு தேர்வை கூட எழுத வேண்டிய சூழல் இருக்கும் என்றால் இந்த ஏற்றத்தாழ்வால் யாருக்கு லாபம்?