"இனி நாங்களும் ரவுடிதான்".. ஐடி ஊழியர்களுக்கும் உதயமாகிறது தொழிற்சங்கம்!
ஐடி ஊழியர்களின் பணிக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதால் அவர்களின் உரிமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தமிழகத்தில் விரைவில் ஐடி தொழிற்சங்கம் அமைக்கப்பட உள்ளது.
சென்னை: அதிக அளவில் பணி பாதிப்பை சந்தித்திருக்கும் தமிழக ஐடி ஊழியர்களின் உரிமைக்காக போராட ஐடி பணியாளர்கள் ஒன்று சேர்ந்து விரைவில் ஐடி தொழிற்சங்கம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென்இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஐடி நகரங்களான பெங்களூர், ஐதராபாத்திற்கு அடுத்தபடியாக சிறந்த ஐடி ஹப்பாக விளங்குவது சென்னை. நாளடைவில் வளர்ச்சியடைந்த ஐடி நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஊராளமானோர் பணியாற்றுகின்றனர். ஏறத்தாழ சுமார் நான்கரை லட்சம் பேர் மட்டுமே தமிழகத்தில் ஐடி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.
கடந்த ஆண்டு எடுத்த ஆய்வு முடிவின்படி இன்போசிஸ் நிறுவனத்தில் 17 ஆயிரம் பேரும், விப்ரோவில் 25 ஆயிரம் பேரம் பணியாற்றுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அதிக அளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் டிசிஎஸ் நிறுவனத்தின் 13 மையங்களில் சுமார் 60 ஆயிரம் பேர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.
ஆட்குறைப்பில் இறங்கியுள்ள நிறுவனங்கள்
இந்நிலையில் ஆட்குறைப்பு காரணமாக செலவீனங்களை கட்டுப்படுத்துவது, அமெரிக்க விசா கெடுபிடிகள் உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு ஐடி துறையில் அதிக அளவாக 5 சதவீதம் வரை ஆட்குறைப்பு இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ள முடியாத ஊழியர்கள் பணியை விட்டு செல்லுமாறு ஐடி பணி ஆபத்துக்கு பிள்ளையார் சுழிபோட்டது காக்னிசண்ட் நிறுவனம்.
உதயமாகும் தொழிற்சங்கம்
இதனால் அரண்டு போயுள்ளனர் தமிழக ஐடி ஊழிளர்கள், இந்த ஆண்டு ஐடி துறையில் செய்யப்படவுள்ள பணியிழப்பில் சிக்கப்போவது சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்கள் தான் என்ற பீதியும் அவர்களது வயிற்றில் புளியைக் கரைக்கிறது. இதனால் ஊழியர்களின் உரிமைக்காக போராடும் வகையில் தொழிற்சங்கம் ஒன்றை அமைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்த தொழிற்சங்கத்தை தொடங்குவதற்கு ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிக ஆர்வம் உள்ளதாகவும் இது வரை வெவ்வேறு நிறுவனத்தை சேர்ந்த 100 பேர் தொழிற்சங்கம் தொடங்க விருப்பம் தெரிவித்து கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்தபோது ஐடி நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை அமைக்க மாநிலச் சட்டத்தில் வழி ஏற்படுத்தப்பட்டது. இதனால் தொழிற்சங்கம் அமைப்பதில் எந்த சட்டச் சிக்கலும் இல்லை என்று தெரிகிறது.
கர்நாடகாவின் நிலை
அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஐடி நிறுவனங்கள் தொழிற்சங்கம் அமைக்க அனுமதியளிக்கவில்லை, ஆனால் ஐடி பணிக்கு எப்போது ஆபத்து வருமோ என்ற அச்சத்தில் உள்ள ஊழியர்கள் அங்கும் தொழிற்சங்கம் அமைக்க அனுமதியளித்தால் நன்றாக இருக்கும் என்று புலம்பத் தொடங்கியுள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தங்களது பங்களிப்பை சிறப்பாக வெளிக்காட்டிய ஐடி ஊழியர்கள் தற்போது தங்களது உரிமைக்காக நாட்டிலேயே முதன்முறையாக ஐடி தொழிற்சங்கம் அமைத்து போராட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.